ஒயின் ஷாப் கட்டளைகள்: நோ கட்டிங்.. ஒன்லி குவார்டர்..
சென்னை:
அரசு நடத்தவுள்ள மதுக்கடைகளில் பணிபுரிபவர்களுக்கு 57 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
வரும் 29ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சுமார் 8,500 மதுக் கடைகளை தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனங்கள் எடுத்து நடத்தவுள்ளன.
கடைக்கு ஒரு மேற்பார்வையாளரும் (ஊதியம் ரூ. 2,500), 4 விற்பனையாளர்களும் (ஊதியம் ரூ. 1,000) நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக மேற்பார்வையாளர்கள் ரூ. 50,000மும் விற்பனையாளர்கள் ரூ. 15,000மும் டெபாசிட் தொகையைக் கட்டி வேலையில் சேர்ந்து வருகின்றனர். பலர் பணம் கட்ட முடியாமல் அல்லாடி வருகின்றனர்.
இவர்களுக்கு 28ம் தேதி ஒரு நாள் பயிற்சி முகாம் நடக்கிறது. இந் நிலையில் இவர்களுக்கு 57 கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அவற்றின் முக்கியமான கட்டுப்பாடுகளின் விவரம்:
* கடையின் வரவு- செலவு, சரக்குகளின் (மது வகைகள்) உரிய கணக்குகளை மேற்பார்வையாளர் பேணி வர வேண்டும்.
* கடையின் சாவி அவர் வசமே இருக்க வேண்டும். கடையை மூடும்போதும் திறக்கும்போதும் மேற்பார்வையாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.
* குளறுபடிகள் நடந்தாலோ, சரியாக பணியைச் செய்யாவிட்டாலோ ஊழியர்கள் முன் அறிவிப்பில்லாமல் பணி நீக்கம் செய்யப்படும். அவர்களின் டெபாசிட் தொகையும் திருப்பித் தரப்பட மாட்டாது.
* தினமும் வேலைக்கு வர வேண்டும். காலை 8 மணி முதல் இரவு 12 வரை கடைகள் திறந்திருக்க வேண்டும்.
* 21 வயதுக்கு குறைவான யாரையும் பாரில் மது அருந்த அனுமதிக்கக் கூடாது. கடையில் ஆபாச சுவரொட்டிகளையோ, படங்களையோ வைக்கக் கூடாது
இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கடைகளில் 30 மில்லி, 60 மில்லி எல்லாம் ஊற்றித் தரும் திட்டமும் இல்லையாம். குடிக்க விரும்புவோர் குறைந்தபட்சம் குவார்டர் வாங்கித் தான் அடிக்க (குடிக்க) வேண்டும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications