3 லட்சம் டாலர் வழக்கு: ஜெ. மீதான விசாரணை தீவிரம்- சிபிஐ தகவல்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த 1991 முதல் 96ம் ஆண்டு வரை அமெரிக்காவிலிருந்து 3 லட்சம் டாலர் பணம் அனுப்பப்பட்டது குறித்த வழக்கில் விசாரணை தீவிரமாக நடந்து வருவதாக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் இயக்குனர் பி.சி.சர்மா கூறியுள்ளார்.
சென்னை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது அவருக்கு வந்த 3 லட்சம் டாலர் பணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை நல்ல முன்னேற்றத்தில் உள்ளது. மற்ற வழக்குகளைப் போலவே இதையும் கருதி விசாரித்து வருகிறோம். ஜெயலலிதா உள்பட வேறு எந்த முக்கிய வழக்கிலும் அரசியல் தலையீடு இல்லை.
சிபிஐ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்குமாறு அனைத்து மாநிலங்களையும் கோரியுள்ளோம். தமிழ்நாடு இத்தகைய நீதிமன்றத்தை முதல் முறையாக அமைத்துள்ளது. இதன் மூலம் சிபிஐ தொடர்பான வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும்.
இந்தியாவில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு தேடப்பட்டு வரும், இரண்டு முக்கிய நபர்களான பிரபாகரன் மற்றும் தாவூத் இப்ராகிம் ஆகியோரைப் பிடிக்க சர்வதேச போலீஸாரின் (இன்டர்போல்) உதவி நாடப்பட்டுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக இவர்களைப் பிடிக்க முயற்சிகள் நடந்து கொண்டுள்ளன. ஆனாலும் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை.
இருப்பினும் முயற்சியை நாங்கள் கைவிடவில்லை. சில நாடுகள் சிபிஐக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதனால்தான் இந்த தாமதம் ஏற்படுகிறது என்றார் சர்மா.












Click it and Unblock the Notifications