பணி நேரத்தை அதிகரிக்க முடிவு: அரசு மருத்துவர்களுக்கு கிடுக்கிப்பிடி
சென்னை:
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தினமும் கூடுதலாக சில மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் அரசு மருத்துவமனைகளில் சில மணி நேரம் பொழுதைப் போக்கிவிட்டு தாங்கள் நடத்தும் தனி டிஸ்பென்சரிகளிலேயே பெரும்பாலான நேரத்தை செலவழித்து, காசு பார்ப்பதிலேயே குறியாய் இருக்கும் டாக்டர்களுக்கு கடிவாளம் போட அரசு முடிவு செய்துள்ளது.
இப்போது அரசு மருத்துவமனைகளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை டாக்டர்களுக்கு பணி நேரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான நேரம் டாக்டர்கள் மருத்துவமனையில் இருப்பதில்லை.
தவிரவும் அறுவை சிகிச்சைகள் செய்யும் நாட்களில் பிற நோயாளிகளுக்கு சிகிச்சை தருவதும் இல்லை.
இதனால் எவ்வளவு டாக்டர்கள் இருந்தாலும் அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. பிற்பகலில் மருத்துவமனைக்குப் போனால் அவுட் பேசண்ட் வார்டுகள் இயங்குவதே இல்லை. அவசர சிகிச்சை வார்டுகளில் மட்டுமே டாக்டர்கள் இருக்கின்றனர்.
இதனால் சாதாரண நோய்களுடன் செல்லும் நோயாளிகளை அவசர சிகிச்சைப் பிரிவு டாக்டர்கள் விரட்டியடிக்கின்றனர்.
இந்தக் குளறுபடிகளை சரி செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. அவுட் பேசண்ட் வார்டுகளை கூடுதலாக ஒரு மணி நேரம் இயங்கச் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த வார்டுகள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை கட்டாயம் செயல்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. இதனால் டாக்டர்கள் கூடுதலாக சில மணி நேரம் மருத்துவமனைகளிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்படும்.
சென்னையில் உள்ள சில மருத்துவமனைகளில் இந்தத் திட்டம் முதல்கட்டமாக அமலாக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications