ஜெவை பாராட்டி தீர்மானம்: சென்னை மாநகராட்சியில் திமுக-அதிமுக கவுன்சிலர்கள் கடும் மோதல்
சென்னை:
டான்சி வழக்கில் முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதையடுத்து அவரைப் பாராட்டி சென்னை மாநகராட்சியில் அதிமுக கவுன்சிலர்கள் தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு கடும் அமளி ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியின் கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும், மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிட நேரம் எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர்.
அதன் பின்னர் டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றும், ஜெயலலிதாவைப் பாராட்டியும் அதிமுக சார்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தை திமுக கவுன்சிலர்கள் எதிர்த்தனர். இதனால் திமுக- அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பின்னர் தீர்மானத்தின் பேசவாவது தங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கோரினர்.
ஆனால், துணை மேயர் கராத்தே தியாகராஜன் அனுமதி வழங்க மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் கோஷமிட்டனர்.
அதிமுகவினரும் பதிலுக்கு கோஷமிட்டனர். ஒருவரை நோக்கி ஒருவர் திட்டிக் கொண்டனர். இதனால் அவை அமளி, துமளியானது. இதையடுத்து திமுகவினர் வெளிநடப்புச் செய்தனர்.
இதன் பின்னர் ஜெயலலிதாவைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.