போலி ஹெராயின்: போலீஸ் கமிஷ்னரின் கார் டிரைவர் கைது
சென்னை:
ஹெராயின் கடத்தலில் திருநெல்வேலி போலீஸ் கமிஷ்னரின் கார் டிரைவர், ஆயுதப் படை போலீஸ்காரர் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை தி.நகரில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு காரில் ஹெராயின் போன்ற பவுடர் பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து காரில் இருந்த 4 பேரையும் போலீசார் பிடித்தனர். அவர்கள் தங்கியிருந்த லாட்ஜூக்குச் சென்றபோது அங்கு மேலும் 5 பேர் இருந்தனர்.
அங்கு போலி ஹெராயின் பவுடர் இருந்தது. அதை ஹெராயின் என்று சொல்லி விற்க இந்தக் கும்பல் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 9 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களில் பிரின்ஸ் என்பவர் நெல்லை போலீஸ் கமிஷ்னர் நந்தகோபாலின் கார் டிரைவர் என்று தெரியவந்தது. இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீஸ்காரராக உள்ளார். கமிஷ்னரின் காரை ஓட்டி வருகிறார்.
இன்னொரு நபரான செல்வின் பால் என்பவர் சென்னை ஆயுதப்படை போலீஸ்காரராவார்.
இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை போலீஸ் கமிஷ்னர் நடராஜ் தெரிவித்துள்ளார்.
கமிஷ்னராகப் பொறுப்பேற்ற பின் முதல் முறையாக செய்தியாளர்களை நடராஜ் இன்று சந்தித்தார். அவர் கூறிதாவது:
சென்னை நகரில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரெளடிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு வசதியாக, நகல் உள்ள சமூக விரோதிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
இதுவரை துப்பு துலங்காத குற்றங்களில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்படும். குடித்து விட்டு தண்ணீர் லாரிகளை ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹெராயின் கடத்தல் வழக்கில் 2 போலீசாருக்கு சம்பந்தமுள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்டப்பட மாட்டாது என்றார்.