மலேசியாவில் 8 தமிழ் இளைஞர்களுக்கு மரண தண்டனை: காப்பாற்ற கோரி வாஜ்பாய்க்கு வைகோ கடிதம்
வேலூர்:
மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 8 தமிழக இளைஞர்களைக் காப்பாற்றக் கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த8 இளைஞர்கள் போதைப் பொருட்களைக் கடத்தியதாக கூறி அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களைக் காப்பாற்றக் கோரி பல்வேறு விதமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கட்டடத் தொழிலாளிகளாக இந்த 8 பேரும் மலேசியாவுக்கு உரிய விசாவுடன் சென்றனர்.
கோலாலம்பூரில் இந்தியர் ஒருவருக்குச் சொந்தமான கட்டடத்தில் இவர்கள் மாடியில் தங்கினர். கட்டடத்தின் இன்னொரு பகுதியில் உரிமையாளரான இந்தியர் தங்கியிருந்தார்.
அப்போது போலீசார் திடீரென ரெய்ட் நடத்தினர். அப்போது உரிமையாளர் வசிக்கும் பகுதியில் இருந்து போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால், இதை இந்த 8 தமிழர்களும் வைத்திருந்ததாகக் கணக்குக் காட்டி போலீசார் தவறான வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து இவர்களை நீதிமன்றம் விடுவித்துவிட்டது. ஆனால். போலீசார் மீண்டும் இவர்கள் மீது போதைப் பொருள்கள் கடத்தியதாக வழக்குப் போட்டு இவர்களுக்கு தூக்கு தண்டனை வாங்கித் தந்துள்ளனர்.
இந்த அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்றக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு சமீபத்தில் வைகோ கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் வாஜ்பாய்க்கும் வைகோ தற்போது கடிதம் எழுதியுள்ளார்.
வேலூர் சிறையில் இருந்து இன்று இந்தக் கடிதத்தை வைகோ அனுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications