ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: அரசு வழக்கறிஞரை நீக்கக் கோரி ஆளுநரிடம் திமுக மனு
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட தமிழக அரசு வழக்கறிஞரை நீக்கக் கோரி ஆளுநர் ராம்மோகன் ராவிடம் திமுக மனு கொடுத்துள்ளது.
இந்த வழக்கறிஞர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து இவரை நீக்க வேண்டும் என திமுக கோரியுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தை ராம்மோகன் ராவிடம் இன்று திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.
அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என அதில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
பா.ஜ.கவுக்கு கருணாநிதி கடும் கண்டனம்
இதற்கிடையே திமுகவையும், அதிமுகவையும் சம தூரத்தில் வைத்திருப்பதாக தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கூறியிருப்பதற்கு கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், திமுகவையும், அதிமுகவையும் சம தூரத்தில் வைத்துப் பார்க்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள பதில் அறிக்கையில்,
தமிழகத்தில் பா.ஜ.க. ஏதோ உச்சாணிக் கொம்பில் இருப்பதாக நினைத்துக் கொண்டு அக் கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள், அறிக்கை விடுகிறார்கள்.
நல்லவராகவும், வல்லவராகவும் திகழும் பிரதமர் வாஜ்பாய்க்குத் தெரிந்தோ, தெரியாமலோ, இப்படி தவறான அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.
டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் விடுத்துள்ள கடும் கண்டனத்தையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என்று திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் கோரி வரும்போது, தமிழக பா.ஜ.க. மட்டும்தான், ஜெயலலிதா பதவி விலகத் தேவையில்லை என்று சாமரம் வீசியது.
காங்கிரஸ், பா.ஜ.க.வை மீண்டும் அதிகாரத்திற்கு வர விட மாட்டேன் என்று சட்டசபையில் முழங்கிய ஜெயலலிதாவை விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாதவர்கள் காங்கிரஸிலும், பா.ஜ.க.விலும் உள்ளதால்தான் இப்படிப்பட்ட அறிக்கைகள் வருகின்றன என்று கூறியுள்ளார் கருணாநிதி.
பா.ஜ.கவோடு காங்கிரசையும் கருணாநிதி தாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. செயல் தலைவர் பதவியில் இருந்து இளங்கோவனைத் தூக்கிவிட்டு ஜெயலலிதாவுக்கு ஆதரவான வாசனை தலைவராகப் போட்டுள்ளதால் அக் கட்சியின் மீது கருணாநிதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications