தமிழகத்தில் நாளை முதல் அரசு மதுபான கடைகள் திறப்பு
சென்னை:
தமிழகத்தில் மதுக் கடைகளை அரசே நடத்தலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமீபத்தில் தமிழக அரசு அவசரச் சட்டம் மூலம் தனியார் மதுபானக் கடைகளின் உரிமங்களை ரத்து செய்தது. கடைகளை அரசின் டாஸ்மாக் கூட்டுறவு நிறுவனமே இனி நடத்தும் என்று அறிவித்தது.
இதையடுத்து அரசு மதுபான கடைகளுக்கு விற்பனையாளர், மேற்பார்வையாளர் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடந்தது. இந் நிலையில் தனியார் மது பான விற்பனையாளர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். கடைளை தாங்களே தொடர்ந்து நடத்த அனுமதி கோரி நூற்றுக்கணக்கான ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப்பிரகாசம் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ஒரு வார காலத்திற்கு மது பான விற்பனையை மேற்கொள்ள அரசுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனால் கடைகளை நடத்த தனியாருக்கு மேலும் ஒரு வார காலம் அனுமதி கிடைத்தது.
இந் நிலையில் இந்த மனுக்கள மீதான விசாரணை இன்றும் தொடர்ந்தது. இருதரப்பு வக்கீல்களின் வாதம் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் இடைக்காலத் தீர்ப்பை வெளியிட்டனர்.
அதன்படி அரசோ, டாஸ்மாக் நிறுவனமோ அல்லது கூட்டுறவு சங்கங்களோ தமிழகத்தில் சில்லறை மது பானக் கடைகளை நடத்தலாம்.
இருப்பினும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்குய உரிமத் தொகையை செலுத்திய தனியார் கடைக்காரர்களுக்கு 2004ம் ஆண்டு வரை மதுக் கடைகளை நடத்த உரிமை உண்டு. அவர்களுக்கு டாஸ்மாக் நிறுவனம் பழைய விலையிலேயே மதுபானங்களை வினியோகிக்க வேண்டும்.
மேலும் 879 தனியார் மதுபானக் கடை உரிமையாளர்களும் ஒரு வார காலத்திற்கு மதுக் கடைகளை நடத்தலாம். மற்ற கடைகள் இன்றுடன் மூடப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் இறுதித் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
இந்த உத்தரவின் மூலம் நாளை முதலே அரசு தனது மதுபானக் கடைகளைத் திறந்துவிட வழி ஏற்பட்டுள்ளது.