ஜனவரி 1, மிலாது நபி விடுமுறைகள் ரத்து: அரசுக்கு கண்டனம்
சென்னை:
2004ம் ஆண்டுக்கான அரசுப் பொது விடுமுறை நாட்களை 16 ஆக குறைத்துள்ள தமிழக அரசு, ஜனவரி 1 மற்றும் மிலாடி நபி உள்ளிட்ட சில விடுமுறைகளையும் ரத்து செய்துள்ளது.
உலகெங்கிலும் கொண்டாடப்படும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதியை வேலை நாளாக அறிவித்திருப்பது அரசு ஊழியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் விடுத்துள்ள அறிக்கையில், அரசு நிர்வாகத்தை சீர்படுத்தவும், திறமையை அதிகரிக்கவும், பொது மக்களுக்கு சிறந்த சேவையை அளிக்கவுமே விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார்.
மிலாடி நபி தினத்தை விடுமுறை நாட்கள் பட்டியலிலிருந்து நீக்கியதற்காக இந்திய தேசிய லீக் கட்சி அரசுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் முஸ்லீம் மக்களின் மனதை அரசு புண்படுத்தி விட்டதாக அக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
ஏ.டி.எம். மூலம் சம்பளம்: மதுரையில் அமல்
இதற்கிடையே அரசு ஊழியர்களுக்கு தானியங்கி இயந்திரம் (ஏ.டி.எம்.) மூலமாக ஊதியம் வழங்கும் முறை அமலாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரையில் இந்த முறை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்காக ஊழியர்களுக்கு கனரா வங்கியின் ஏ.டி.எம். கார்ட் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும், சம்பளத்தை கனரா வங்கியின் ஏ.டி.எம். இயந்திரங்களில் எடுத்துக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத் திட்டம் தமிழகம் முழுவதும் அமலாக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications