40 தமிழக மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் பதற்றம்
ராமநாதபுரம்:
தஞ்சாவூர் மற்றும் பாண்டிச்சேரியில் மிக கனத்த மழை பெய்துள்ளது.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 40 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் பிடித்துச் சென்று விடுவதால் தொடர்ந்து அப்பகுதிகளில் அமைதியின்மை நிலவி வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் சென்றால் அவர்கள் பத்திரமாக திரும்பி வருவார்களா என்ற கேள்விக்குறியுடன் மீனவர் குடும்பத்தினர் நிம்மதியின்றி வாழ்ந்து வருகிறார்கள்.
இந் நிலையில் நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 600 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கோட்டை மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும், கடற்படையினரும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் 40 மீனவர்கள், அவர்களது 10 படகுகளுடன் கடற்படையினரிடம் மாட்டிக் கொண்டனர். மற்ற மீனவர்கள் தப்பி வந்து விட்டார்கள். பிடிபட்ட 40 மீனவர்களும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதற்கிடையே, புதுக்கோட்டை மற்றும் திருச்சியிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குத் தப்பிச் சென்ற 43 தமிழ் அகதிகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்களைத் திருட்டுத் தனமாக இலங்கைக்குப் படகில் ஏற்றி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டணத்தைச் சேர்ந்த 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.