32 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைப்பு: மீட்க பிரதமருக்கு ஜெ. கோரிக்கை
சென்னை - ராமநாதபுரம்:
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். கட்சத் தீவை மீண்டும் இந்தியாவே குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கோரியுள்ளார்.
ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை அடிக்கடி இலங்கை கடற்படையினரும், இலங்கை மீனவர்களும் பிடித்துச் சென்று விடுவதால் தொடர்ந்து அப்பகுதிகளில் அமைதியின்மை நிலவி வருகிறது. கடலில் மீன் பிடிக்கச் சென்றால் அவர்கள் பத்திரமாக திரும்பி வருவார்களா என்ற கேள்விக்குறியுடன் மீனவர் குடும்பத்தினர் நிம்மதியின்றி வாழ்ந்து வருகிறார்கள்.
இந் நிலையில் நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 600 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கோட்டை மன்னார் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும், கடற்படையினரும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
இதில் 32 மீனவர்கள், அவர்களது 10 படகுகளுடன் கடற்படையினரிடம் மாட்டிக் கொண்டனர். மற்ற மீனவர்கள் தப்பி வந்து விட்டார்கள். பிடிபட்ட 32 மீனவர்களும் இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெ கடிதம்:
இதற்கிடையே ஹைதராபாத்தில் இருந்தவண்ணம் பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில்,
இலங்கை கடற்படையால் கடத்திச் செல்லப்பட்ட 32 மீனவர்களையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வுக்கு மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
கட்சத் தீவு பகுதியில் தான் மீன் வளம் உள்ளது. இதனால் தான் மீனவர்கள் அங்கு செல்கின்றனர். இதை இலங்கை தடுக்கிறது.
இதனால் இலங்கைக்கு நாம் தாரை வார்த்த கட்சத் தீவை மீண்டும் குத்தகைக்கு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
இதற்கிடையே, புதுக்கோட்டை மற்றும் திருச்சியிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குத் தப்பிச் சென்ற 43 தமிழ் அகதிகளையும் இலங்கை கடற்படையினர் பிடித்து யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அவர்களைத் திருட்டுத் தனமாக இலங்கைக்குப் படகில் ஏற்றி வந்ததாக புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டணத்தைச் சேர்ந்த 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.