டி.ஆர்.பாலு உத்தரவு: ஜெயலலிதாவுக்கு ஹரியாணா முதல்வர் ஆதரவு
சென்னை:
ரூ. 50 கோடிக்கு மேலான கட்டுமானத் திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற வேண்டும் என்ற மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் உத்தரவுக்கு ஹரியாணா முதல்வர் ஓம் பிரகாஷ் செளதால எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா பூமி பூஜை நடத்த இருந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி ரூ. 50 கோடிக்கு மேலான திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு சில முதல்வர்கள் கடிதம் வந்தது என்று அக்னாலெட்ஜ்மென்ட் கடிதத்தை மட்டுமே பதிலாக அனுப்பியுள்ளனர்.
மற்றவர்கள் அதையும் அனுப்பவில்லை. இந் நிலையில் ஹரியாணா முதல்வர் செளதாலா ஜெயலலிதாவுக்குப் பதில் அனுப்பியுள்ளார்.
அதில், முதல்வர் ஜெயலலிதாவின் கருத்துக்களை தானும் பகிர்ந்து கொள்வதாகவும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவு மாநில அதிகாரத்தைப் பறிப்பதாக உள்ளதாகவும் செளதாலா கூறியுள்ளார்.
மேலும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த பிற்போக்கான உத்தரவுக்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களும் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications