சந்திரிகா- ரணில் பேச்சு தோல்வி: விரைவில் இடைத்தேர்தல்?
கொழும்பு:
அதிபர் சந்திரிகாவிற்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தரப்புக்கும் இடையே நடந்து வந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்துவிட்டதால் அங்கு இடைத் தேர்தலை தவிர்க்க முடியாது என்ற சூழல் உருவாகியுள்ளது.
தங்களுக்கு இடையேயான அதிகாரச் சண்டையைப் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதற்கு சந்திரிகாவும், ரணிலும் நான்கு நபர் குழு ஒன்றை அமைத்தனர். அந்தக் குழு இன்றும் கூடி விவாதித்தது.
ஆனால், பேச்சுவார்த்தையின் முடிவில் எந்த ஒரு முக்கிய தீர்வும் எட்டப்படவில்லை. மீண்டும் ஒரு முறை கூடி விவாதிப்பது எனவும், சந்திரிகாவும், ரணிலும் இந்த வார இறுதியில் சந்தித்து பேசுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், டிசம்பர் 18ம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இரு தரப்பினரும் ஆயத்தமாகி வருகின்றனர்.
இடைத்தேர்தல் வரலாம் என்ற அச்சத்தின் காரணமாக இலங்கை பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.