திமுக கூட்டணியில் நீடிக்க பா.ஜ.க. விருப்பம்: மாறன் அஞ்சலி நிகழ்ச்சியில் இல.கணேசன் பேச்சு
சென்னை:
சென்னையில் நடந்த புகழாஞ்சலி நிகழ்ச்சியில், மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறனுக்கு பல கட்சித் தலைவர்களும் புகழாரம் சூட்டினர். அவரது முழு உருவப் படத்தை திமுக தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுகவைத் தவிர தமிழகத்தின் அனைத்து எதிர் க்கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
முதலில் மாறனின் முழு உருவப் படத்தை கருணாநிதி திறந்து வைத்தார்.
பின்னர் பா.ஜ.க. அகில இந்திய செயலாளர் இல.கணேசன் பேசுகையில், மாறன் உயிருடன் இருந்தபோது திமுகவையும், பா.ஜ.கவையும் ஒரே அணியில் கொண்டு வந்தார்.
இப்போது அவர் மறைந்துவிட்ட நிலையிலும் இந்த அஞ்சலி நிகழ்ச்சி மூலமாக பா.ஜ.கவையும் திமுகவையும் ஒரே மேடையில் அமரச் செய்திருக்கிறார். இந்த நிலை தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
மாறனின் மறைவையடுத்து அவரது குடும்பத்தினருக்கு, திமுகவினருக்கு நம்மால் ஆறுதல் சொல்லிவிட முடியும். ஆனால், கருணாநிதிக்கு ஆறுதல் சொல்ல முடியாது. மாறனின் இழப்பு கருணாநிதிக்கு மிகப் பெரும் இழப்பு என்றார்.
காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைத் தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், மூன்றாம் உலக நாடுகளின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர் மாறன். தோஹா மாநாட்டில் அவர் ஆற்றிய உரை, ஐரோப்பிய நாடுகளின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றது, இந்தியாவுக்கும், வளரும் நாடுகளுக்கும் பெருமளவில் உதவியது என்றார்.
பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் பேசுகையில், திராவிட இயக்கத்தின் வரலாற்றின் ஒரு பாதியை மாறன் புத்தகமாக எழுதியுள்ளார். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் அது. அதன் தொடர்ச்சியை கருணாநிதி எழுத வேண்டும் என்றார்.
எம்.ஜி.ஆர்.கழக பொதுச் செயலாளர் ஆர்.எம்.வீரப்பன் பேசுகையில், எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர்களில் ஒருவராக விளங்கியவர் மாறன். அதேபோல எம்.ஜி.ஆரும் மாறன் மீது அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார் என்றார்.
கருணாநிதி பேசுகையில், எனக்கு மாறன் செய்திருக்க வேண்டிய வேலையை (படத் திறப்பு, அஞ்சலி) நான் அவருக்கு இப்போது செய்து கொண்டிருக்கிறேன். கட்சியில் இருந்தபோது அவருக்காக நான் எத்தனையோ செய்துள்ளேன். அதற்குப் பிரதி உபகாரமாக, அவரது படத்தை திறக்க வைத்து என்னைத் தண்டித்து விட்டார் மாறன்.
கல்லூரியில் படித்தபோது, ஆங்கில மோகத்தை எதிர்த்து வகுப்புகளில் உள்ளேன் ஐயா என்றுதான் கூற வேண்டும் என்று சக மாணவர்களிடம் வலியுறுத்தியவர். உள்ளேன் ஐயா என்று கூறிய மாறன் இப்போது இல்லையே என்று நினைக்கும்போது நெஞ்சு கனக்கிறது.
மாறன் விட்டுச் சென்ற பணிகளை நான் தொடர்ந்து செய்வேன் என்ற செய்தியை உங்களுக்கு இந்த நிகழ்ச்சியின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் குறித்த வரலாற்றின் இன்னொரு பாதியை நான் எழுதுவேன் என்றார்.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு, காங்கிரஸ் தலைவர் வாசன், மார்க்சிஸ்ட் தலைவர் வரதராஜன், மத்திய அமைச்சர் கண்ணப்பன், இந்து பத்திரிக்கை ஆசிரியர் ராம் ஆகியோரும் பேசினர்.












Click it and Unblock the Notifications