சட்டமன்றத் தேர்தல்: டெல்லி, ராஜஸ்தான், ம.பி, சட்டீஸ்கரில் வாக்குப் பதிவு முடிந்தது
டெல்லி:
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி- பைனல் என்று கருதப்படும் மத்தியப் பிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களின் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று அமைதியாக நடந்து முடிந்தது.
இந்த நான்கு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான போலீசார் தவிர சுமார் 4 லட்சம் மத்தியப் படைகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
வட மாநிலங்கள் கடும் பனி நிலவுவதால் இதுவரை வாக்குப் பதிவு மிக மந்தமாகவே இருந்தது. பிற்பகலுக்கு மேல் தான் ஓட்டுப் பதிவு ஓரளவுக்கு சூடு பிடித்தது. ஒட்டுமொத்தமாக 55 முதல் 60 சதவீதம் வரை வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த நான்கு மாநிலங்களிலுமே ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.கவும் இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
பல்வேறு கருத்துக் கணிப்புகளின்படி மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் தோல்வியடையும் என்றும், பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரியவந்துள்ளது. இம் மாநில முதல்வர் திக்விஜய் சிங் கடந்த 10 ஆண்டுகளாக தொடர்ந்து காங்கிரஸ் அரசை நடத்தி வருகிறார். இங்கு பா.ஜ.க. சார்பில் உமா பாரதி முதல்வர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
டெல்லியில் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமைல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிகிறது. இங்கு பா.ஜ.க. சார்பில் மதன்லால் குரான முதல்வர் பதவிக்கு நிறுத்தப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடத்தி வரும் அசோக் கெலோட் மீண்டும் முதல்வராவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இங்கு அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் வசுந்தரா ராஜே சிந்தியா நிறுத்தப்பட்டுள்ளார்.
சட்டீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் முதல்வர் அஜீத் ஜோகி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரமாக உள்ளார். இங்கு பா.ஜ.க. சார்பில் முதல்வர் பதவிக்கு நிறுத்தப்பட்ட திலீப் சிங் ஜூதேவ் பிராந்தி குடித்துக் கொண்டே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக பிடிபட்ட விவகாரம் பெரிதானதால் பா.ஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான செமி-பைனலாக இந்த 4 வட மாநிலத் தேர்தல்களும் கருதப்படுகின்றன.
இதனால் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மிகத் தீவிர பிரச்சாரம் நடத்தினர்.
நான்கு மாநிலங்களிலும் வரும் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. முதல்முறையாக முழுக்க முழுக்க மின்னணு எந்திரங்களால் வாக்குப் பதிவு நடப்பதால் அன்றே முடிவுகள் தெரிந்துவிடும்.
இதற்கிடையே சட்டீஸ்கர் மாநிலத்தில் 5 வாக்குப் பதிவு மையங்களில் அதிரடியாக நுழைந்த நக்ஸலைட்டுகள் அங்கிருந்த மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களை எடுத்துச் சென்றுவிட்டனர். வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே இச் சம்பவம் நடந்துள்ளது. மற்றபடி சிறு சிறு மோதல்கள் தவிர பெரிய அளவில் வன்முறை ஏதுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.