அரசு மதுக் கடையை மூட விளக்குமாறுகளுடன் வந்த பெண்கள்
மதுரை - சென்னை:
குடியிருப்புகள், மருத்துவமனைகள், கோவில்கள் அருகே புதிய மதுக் கடைகளை அரசு திறந்துள்ளதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மாநிலம் முழுவதிலும் மூன்றாவது நாளாக இன்றும் ஆங்காங்கே மதுக் கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
துடைப்பங்களுடன்...
மதுரை சிம்மக்கல் பகுதியில் வீடுகளுக்கு அருகே திறக்கப்பட்ட மதுக் கடையை மூடக் கோரி பெண்கள் கையில் விளக்குமாறுகளுடன் வந்தனர். நிலைமை கட்டுப்பாட்டை இழக்கும் சூழல் உருவானதையடுத்து கடையை அதிகாரிகள் பூட்டிவிட்டுச் சென்றனர்.
இன்று கடை விடுமுறை என்ற அறிவிப்புப் பலகையை வைத்துவிட்டுச் சென்றனர். அதை பெண்கள் தூக்கி வீசினர்.
பெண்கள் பள்ளி அருகே..
இதேபோல, மதுரை புதூர் பஸ் நிலையப் பகுதியில் பெண்கள் உயர் நிலைப் பள்ளியை ஒட்டி மதுக் கடை திறக்கப்படுவதை எதிர்த்து ஏராளமான பெண்கள், மாணவிகள், பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடையை திறந்தால் புகுந்து உடைத்து நொறுக்குவோம் என மக்கள் எச்சரித்ததால் அந்தக் கடை திறக்கும் முயற்சியை அதிகாரிகள் கைவிட்டனர்.
குடிநீர் குழாய் அருகே மதுக் கடை:
சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனி பகுதியில், குடிநீர் தொட்டி மற்றும் பொதுக் குழாயின் அருகே மதுக் கடை திறக்கப்படுவதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடிநீர்த் தொட்டி அருகே மதுக் கடை அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு குடிநீர் எடுக்க பெண்களுக்கு பிரச்சனைை வரலாம் என்பதால் இந்தப் போராட்டம் நடந்தது.
கோவிலுக்கு அருகே...
கோவை செல்வபுரம் பகுதியில் கோவிலுக்கு அருகே மதுக் கடை திறக்கப்படுவதை எதிர்த்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதே போல கோவையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டம், கூட்டமாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களது பகுதியில் மதுக் கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.
பெண்கள் ஓய்வு அறையில்...
அதே போல ஆரணியில் பஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் ஓய்வு அறையில் மதுக் கடையை வைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.