கார்- ஆயுதங்கள் கடத்தல்: அல்-உம்மா ஹைதர் அலி நீதிமன்றத்தில் ஆஜர்
கோவில்பட்டி:
கார், ஆயுதக் கடத்தல் தொடர்பாக அல்-உம்மா அமைப்பைச் சேர்ந்த ஹைதர் அலி கோவில்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அல் உம்மாவைச் சேர்ந்த இமாம் அலி, ஹைதர் அலி, அப்துல் முத்தலிப், ஜாகிர் உசேன், முகம்மத் அப்துல் காதர் ஆகியோர் கடந்த 1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28ம் தேதி திருவனந்தபுரத்திலிருந்து வாடகைக்கு கார் பிடித்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தனர்.
வரும் வழியில் டாக்சி டிரைவர் மதுசூதனன் என்பவரை தாக்கி வெளியே தள்ளிவிட்டு, காரைக் கடத்தினர். காரை முகம்மத் காதர் ஓட்டி வந்தார்.
அவர்களது காரை கோவில்பட்டி அம்பேத்கர் சிலை அருகே போலீஸார் வழிமறித்தனர். இதையடுத்து காரை நிறுத்தாமல் வேகமாக ஓட்டினார் முகம்மத். அப்போது அந்த கார் அருகில் இருந்த பாலத்தில் மோதி கவிழ்ந்தது.
ஆனால், காரில் பயணம் செய்த 5 பேரும் தப்பி விட்டனர். காரில் ஏராளமான ஆயுதங்கள் இருந்தன. இதையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கைதானவர்களில் இமாம் அலியும் ஹைதர் அலியும் மீண்டும் தப்பினர். இதில் ஹைதர் அலி பிடிபட்டுவிட்டார். இமாம் அலியை பெங்களூரில் வைத்து தமிழக போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இந்த கார் கடத்தல், ஆயுதக் கடத்தல் வழக்கு தொடர்பாக ஹைதர் அலி கோவில்பட்டி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications