பாபர் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
மதுரை:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் நெருங்குவதால் மதுரையில் இன்று முதல் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் நினைவு தினம் வரும் 6ம் தேதி அனுசரிக்கப்படவுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் மாநகர் என்று அழைக்கப்படும் மதுரையில் இன்று முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மதுரை ரயில் நிலையம், மீனாட்சி அம்மன் கோவில் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகள் தீவிரமாக சோதிக்கப்படுகின்றனர். அதேபோல தண்டவாளத்திலும் அடிக்கடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பயணிகளும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றனர். கோவிலுக்குள் வெடிகுண்டு இருப்பதைக் கண்டறியும் மெட்டர் டிடெக்டர் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.