கருணை காட்டுங்கள்!
சென்னை:
உலக ஊனமுற்றோர் தினமான இன்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு நீண்ட காலமாக நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி பார்வையற்ற பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இன்று உலக ஊனற்றோர் தினம். இதையொட்டி, தமிழக பார்வையற்ற பட்டதாரிகள் சங்கம் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சில கோரிக்கைகளை வைத்துள்ளது.
சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.குமார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பார்வையற்ற மாணவர்களின் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசின் சமூக நலத்துறை கண்டு கொள்ளாமல் உள்ளது.
கல்லூரிக் கட்டண சலுகை பெறுவதற்கு தற்போது அதிகபட்ச ஆண்டு வருவாய் ரூ. 9000 ஆக உள்ளது. இதை உயர்த்துமாறு கோரப்பட்டு வருகிறது. மேலும், பார்வையற்ற மாணவர்களுக்காக தேர்வு எழுதுபவர்கள், படித்துக் காட்டுபவர்களுக்கு கடந்த 17 வருடங்களாக ஒரே சம்பளம்தான் கொடுக்கப்படுகிறது. அதை உயர்த்த வேண்டும்.
பார்வையற்ற மாணவர்களுக்காக விசேஷ பயிற்சிப் பள்ளி ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
முதல்வரை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்பளித்தால் பார்வையற்ற மாணவர்கள், பட்டதாரிகள் தங்களது குறைகளை நேரில் விளக்க வாய்ப்பு கிடைக்கும். முதல்வர் ஜெயலலிதா எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும், கருணை காட்ட வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications