டி.ஆர்.பாலு உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு
சென்னை:
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்குத் தடையாக இருக்கும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் உத்தரவைரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
எஸ்.ராஜமாணிக்கம் என்பவர் இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை பரிசீலித்த தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர், இது தொடர்பாக தாக்கலாகியுள்ள மற்றமனுக்களோடு சேர்த்து இதையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர்.
ராஜமாணிக்கம் தனது மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த அக்டோபர் 27ம் தேதி மத்திய அரசு பிறப்பித்தஉத்தரவின்படி ரூ. 50 கோடிக்கு மேலான திட்டங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே அந்த உத்தரவு அமலுக்கு வருவதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.
இது முற்றிலும் சட்டவிரோதமானது. ஒரு மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலான இத்தகையஉத்தரவை, மாநில அரசுகளின் கருத்தை அறியாமல், பொதுமக்களின் ஆலோசனைகள், யோசனைகளைக்கேட்காமல் அவசரம் அவசரமாக பிறப்பிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை எழுப்புகிறது.
முழுக்க முழுக்க உள்நோக்கத்துடன்தான் அரசாணையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்துள்ளது. மாநிலஅரசுகளின் உரிமையை ஒரே ஒரு அரசாணை மூலம் பறித்துக் கொள்ள மத்திய அரசுக்கு அதிகாரம் கிடையாது.
தமிழகத்தில் சென்னை கோட்டூர்புரத்தில் அமையவுள்ள புதிய தலைமைச் செயலகத்தை குறிவைத்தே இந்தஅரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகளுக்கு மாறாக புதிய தலைமைச் செயலகம் அமையவில்லை. சென்னைப் பெருநகர வளர்ச்சிக்குழுமத்தின் விதிகளுக்கு உட்பட்டே அது கட்டப்படவுள்ளது.
எனவே தலைமைச் செயலகம கட்டப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட இந்த அரசாணையைரத்து செய்து உத்தரவிட வேண்டும். இந்த அரசாணையை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அமல்படுத்தக் கூடாதுஎன்றும் உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ராஜமாணிக்கம்.