பொடா: மறு ஆய்வு குழுவை தடை செய்ய கோரி தமிழகம் மனு- உயர் நீதிமன்றம் தள்ளுபடி
சென்னை:
பொடா மறு ஆய்வுக் குழுவின் நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசின் சார்பில் தலைமைச்செயலாளர் லட்சுமி பிரானேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
லட்சுமி பிரானேசின் மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
பொடா சட்டத்தின் 60வது பிரிவின்படி மத்திய, மாநில அரசுகள் தேவைப்பட்டால் மட்டுமே மறு ஆய்வுக்குழுக்களை நியமித்துக் கொள்ளலாம் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
வைகோ மற்றும் ‘நக்கீரன்’ கோபால் மீதான வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்,மறு ஆய்வுக் குழு இந்த வழக்குகளில் தலையிடுவது நல்லதல்ல. அது நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதாகஅமையும். மேலும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கையும் அது பாதிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கோபாலன், பொடா மறு ஆய்வுக் குழுக்கூட்டத்தில் வைகோ, கோபால் கைது குறித்த ஆவணங்களைத் தர ஒப்புக் கொண்ட தமிழக அரசு இப்போது தனதுநிலையை மாற்றிக் கொண்டுள்ளது.
தனது ஆட்சேபணைகளை தமிழக அரசு மறு ஆய்வுக் குழுவிடமே தெரிவிக்கலாம். இதைவிட்டுவிட்டு பொடாமறுஆய்வுக் குழுவின் விசாரணைக்கே தடை கோருவது முறையல்ல என்றார்.
இதையடுத்துப் பேசிய நக்கீரன் கோபாலின் வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உச்ச நீதிமன்றம் கோபாலின் ஜாமீன்மனுவை மட்டுமே விசாரித்து தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரிக்கவில்லை. எனவே கோபாலின் வழக்கை மறுஆய்வுக் குழு பரிசீலிக்கலாம். அதில் எந்தத் தவறும் இல்லை என்றார்.
முத்தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதாசிவம் தமிழக அரசின் மனுவைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.