ஜெ. வழக்கு: நீதிமன்றம் மீண்டும் பெங்களூர் சிறை வளாகத்துக்கே மாற்றம்
பெங்களூர்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்வுள்ள சிறப்பு நீதிமன்றத்தை மீண்டும் மத்திய சிறை வளாகத்திலேயே அமைக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
முதலில் பெங்களூர்- ஒசூர் நெடுஞ்சாலையில் பரப்பன அக்ரஹாரா பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைப்பது என கர்நாடக அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் ஏற்கவில்லை.
இதையடுத்து அவரது விருப்பப்படி பெங்களூர் மாநகராட்சியின் அருகே உள்ளசிவில் நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என சட்ட மந்திரி சந்திரே கவுடா தெரிவித்தார்.
இந் நிலையில், சிவில் நீதிமன்றம் நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து நெரிசல் மிக்க இடத்தில் இருப்பதால் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும் என்று போலீஸ் டி.ஜி.பி. மடியாளும், போலீஸ் கமிஷனர் மரிசாமியும் தலைமை நீதிபதி ஜெயினைச் சந்தித்துக் கூறினர்.
சிறப்பு நீதிமன்றத்தை மத்திய சிறை வளாகத்தில் அமைக்குமாறும், அதற்குத் தேவையான பாதுகாப்பை காவல்துறை அளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளனர். இதனை நீதிபதி ஜெயின் ஏற்றுக் கொண்டார்.
இந் நிலையில் போலீஸ் கமிஷனர் மரிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாதுகாப்பு விஷயங்களைக் கருத்தில் கொண்டேசிறப்பு நீதிமன்றத்தை மத்திய சிறை வளாகத்தில் அமைக்க தலைமை நீதிபதி என்.கே.ஜெயின் ஒப்புக் கொண்டுள்ளார்.
மத்திய சிறை வளாகத்தில் போலி முத்திரைத் தாள் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் மகாத்மா காந்தி சேவா சதனி கட்டடத்திலேயே ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றார்.