மே மாதம் முதல் சென்னைக்கு வீராணம் தண்ணீர்: அமைச்சர் தகவல்
கடலூர்:
வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் எடுக்கும் சென்னை குடிநீர்த் திட்டம் மே மாதம் அமல்படுத்தப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியிலிருந்து குழாய்கள் மூலம் தண்ணீரைக் கொண்டு சென்று சென்னைக்கு விநியோகம் செய்ய தமிழக அரசின் புதிய வீராணம் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். ரூ. 720 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந் நிலையில் வீராணம் ஏரி தற்போது நிரம்பி வழிகிறது. இதையடுத்து ஏரியைப் பார்வையிட்ட அமைச்சர் சம்பத், செய்தியாளர்களிடம் பேசுகையில், குழாய் பதிப்பது, தண்ணீர் தொட்டிகள் கட்டுவது, தண்ணீரை சுத்திரிகக்கும் நிலையங்கள் உள்ளிட்ட பணிகளில் 70 சதவீத பணிகள் முடிந்து விட்டன.
மொத்தம் 160 கிலோமீட்டர் தொலைவிற்கு குழாய் பதிக்கும் பணி முடிவடைந்துள்ளது. இன்னும்68 கிலோமீட்டர் தொலைவிற்கு மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட வேண்டியுள்ளது.
இதுவரை இந்தத் திட்டத்திற்காக ரூ. 360 கோடி செலவிடப்பட்டுள்ளது. வீராணம் ஏரியின் கொள்ளளவு 1 டிஎம்சி அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு நான்கு முறை ஏரி நிரம்பும் என்று ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
வீராணம் ஏரியை நம்பி காட்டுமன்னார் கோவில், சிதம்பரம் தாலுகாக்களைச் சேர்ந்த 40,000 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. இருப்பினும் இந்தத் திட்டத்தால் அந்த நிலங்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றார் அமைச்சர்.