15ம் தேதி வரை வெளியே தலைகாட்ட வேண்டும்: தொண்டர்களுக்கு திமுக ரகசிய உத்தரவு
சென்னை:
வரும் 15ம் தேதி திமுக நடத்தவிருக்கும் அறப்போராட்டத்தை தடுக்கும் நோக்கில் முக்கிய கட்சிப் பிரமுகர்களையும் தொண்டர்களையும் கைது செய்ய அரசு திட்டமிட்டு வருவதால் யாரும் வெளியே தலைகாட்ட வேண்டாம் என்று திமுக தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இன்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக 15ம் தேதி நடத்தவிருக்கும் போராட்டத்தைத் திசை திருப்பும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
கழக முன்னணித் தலைவர்கள் மீது ஆதாரமில்லாத பொய் வழக்குகள் போட்டு அவர்களைக் கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலிடத்து உத்தரவு என்பதால் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர்களைக் கைது செய்து, பொய்ப் பிராச்சாரம் செய்யத் துணைபோவார்கள் என்று தெரிகிறது.
எத்தகைய அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் கழகத் தொண்டர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்தி அதை வெற்றி பெறச் செய்யவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
போராட்டம் நடைபெறும் முன்பு யாரும் கைதாகக் கூடாது என்றும், போராட்ட தினத்தன்று தான் கைதாக வேண்டும் என்றும், அதுவரை முக்கிய தலைவர்களும், தொண்டர்கள் எந்த விவகாரங்களிலும் தலையிட வேண்டாம் எனவும் மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் மூலம் ரகசிய உத்தரவும் போடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்வேன் என்று திமுக பிரமுகர்களும் தொண்டர்களும் உறுதிமொழிப் பத்திரத்தை எழுதி திமுக தலைவர் கருணாநிதிக்கு நேரிலும், தபால் மூலமாகவும் அனுப்பிய வண்ணம் உள்ளனர். இது குறித்து கருணாநிதி, இவை எல்லாம் வெறும் பத்திரங்கள் அல்ல. என் நெஞ்சில் தாங்கும் பதக்கங்கள் என்று முரசொலியில் எழுதியுள்ளார்.