முதுமலை: கடும் குளிரில் நடுங்கும் கோவில் யானைகள்
முதுமலை:
முதுமலையில் ஓய்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள யானைகள் கடும் குளிரால் பாதிக்கப்பட்டுள்ளன. சில யானைகளுக்கு உடல் நலக் குறைவும் ஏற்பட்டுள்ளது.
முதுமலை காட்டுப் பகுதியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இரவு நேரங்களில் வெப்பநிலை 14 டிகிரிக்கும் குறைவாக இருப்பதால், நகர்ப் பகுதிகளில் வளர்க்கப்பட்ட இந்த யானைகள் குளிர் தாங்க முடியாமல் அலறுகின்றன.
நேற்றிரவு ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நாராயணன் செட்டியாரின் பசீலா என்ற யானை குளிர் தாங்காமல் சரிந்தது. இதையடுத்து பாகன்கள் தீப் பந்தங்களை ஏற்றி குளிரைப் போக்க முயன்றனர். இவ்வளவு பெரிய முகாம் நடத்தினாலும் அங்கு நள்ளிரவில் கால்நடை மருத்துவர் இல்லை.
இதனால் யானைக்கு உரிய சிகிச்சை தர முடியாமல் பாகன்கள் திணறினர். இதே போல மேலும் பல யானைகளும் கடும் குளிரைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன.
கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய இந்த முகாம் வரும் 15ம் தேதி முடிகிறது. இப்போது இங்கு 55 கோவில் யானைகளும் 26 தனியார் யானைகளும் உள்ளன. மொத்தத்தில் 81 (முதல்வர் ஜெயலலிதாவின ராசி எண் 8+1= 9) யானைகள் உள்ளன.
இந்த முகாமே ஜெயலலிதாவுக்காக கஜபூஜை நடத்தவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஜெயலலிதா கர்நாடம் சென்று மைசூர் சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜை நடத்திவிட்டு முதுமலைக்கும் வருவார் என்று செய்திகள் பரவியுள்ளன.












Click it and Unblock the Notifications