கூட்டணி: திமுக தான் முடிவு செய்ய வேண்டும்- பா.ஜ.க
சென்னை:
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியைத் தொடரவே பா.ஜ.க. விரும்புகிறது. ஆனால், இந்தவிஷயத்தில் முடிவெடுக்க வேண்டியது திமுக தான் என பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் கூட்டணிக்கு கருணாநிதியே தலைமை வகிக்கலாம் என்று கூட எங்கள் கட்சியின் தலைவர்வெங்கைய்யா நாயுடு கூறிவிட்டார்.
ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு தொடர வேண்டும் என்றால், நல்லெண்ணத்தின் அடிப்படையில்வரும் 15ம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன் நடத்தவுள்ள போராட்டத்தை (பொடா எதிர்ப்பு போராட்டம்)திமுக வாபஸ் பெற வேண்டும்.
பா.ஜ.கவின் அடுத்த தேர்தல் அறிக்கையில் ராமர் கோவில் கட்டுவோம் என்பதை அறிவிப்போம். உலகின் எந்தசக்தியும் அயோத்தியில் கோவில் கட்டுவதைத் தடுக்க முடியாது.
நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டுமா, இல்லையா என்று கோருவதுகுறித்து நாங்கள் எதுவும் முடிவு செய்யவில்லை.
அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடகத்தில் இருந்து வேறு மாநிலத்துக்கு மாற்றுவது நல்லது. இருமாநிலங்களுக்கு இடையே டென்சன் உள்ள நிலையில் இதுவே நல்லதாகப் படுகிறது.
இலங்கையிடம் இருந்து கச்சத் தீவை மீண்டும் பெறுவது குறித்து மத்திய அரசு யோசிக்க வேண்டும். இதன் மூலம்தான் தமிழக மீனவர்களின் நலனைக் காக்க முடியும். வெளிநாடுகளில் சிறைகளில் உள்ள தமிழர்களைக் காக்கவேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவிடம் கோரியுள்ளேன்.
தாதா சாகிப் பால்கே விருதுக்கு தென்னிந்திய நடிகர்களைத் தேர்வு செய்வது மிகவும் அரிதாகிவிட்டது. அந்தவிருதின் தேர்வு முறைகள் மாற வேண்டும். இது குறித்து மத்திய அரசிடம் பேசுவேன் என்றார்.