மலேசியாவில் தவிக்கும் மேலும் 16 இளைஞர்கள்: காக்க ஜெ. கோரிக்கை
சென்னை:
மலேசியாவில் வாடும் தமிழக மற்றும் ஆந்திர இளைஞர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா பிரதமர் வாஜ்பாய்க்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசிய மற்றும் மாலத்தீவு சிறைகளில் அடைக்கப்பட்டு மரணதண்டனையை எதிர்நோக்கியிருக்கும் 10 தமிழர்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா கடந்த வாரம் வாஜ்பாயிக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந் நிலையில் மேலும் 16 தமிழக, ஆந்திர இளைஞர்களுக்காக குரல் கொடுத்துள்ளார் ஜெயலலிதா. இது குறித்து வாஜ்பாய் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் யஷ்வந்த சின்ஹா ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
வேலை தேடி மலேசியா சென்ற தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 16 இளைஞர்கள் வேலையின்றி துயரமான நிலையில் கோயிலில் தங்கியுள்ளனர். சாப்பிடுவதற்கும் காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக செய்திகள் வந்துள்ளன.
இந்தியா திரும்ப விரும்புவதாக அவர்கள் விருப்பம் தெரிவித்த பின்பும் தூதரக அதிகாரிகள் அவர்களை அலைக்கழித்து வருகின்றனர், இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் அவர்கள் இந்தியா திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் அவர்கள் முதலில் வேலை பார்த்த இடத்தில் தராமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளப் பணத்தையும் அவர்களுக்குப் பெற்றுத் தரவேண்டும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications