கருணாநிதியை சமாதானப்படுத்த சென்னை விரைகிறார் வெங்கையா நாயுடு?
டெல்லி:
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் இருந்து அமைச்சர்களை வாபஸ் பெற்றுவிட முடிவு செய்துள்ள திமுக தலைவர் கருணாநிதியை சமாதானப்படுத்த பிரதமர் வாஜ்பாயின் சார்பில் சந்தித்துப் பேச பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை விரைகிறார்.
துணைப் பிரதமர் அத்வானி- முதல்வர் ஜெயலலிதா ரகசிய கூட்டணி நிலவினாலும், திமுகவுடனான கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறார் பிரதமர் வாஜ்பாய்.
இந் நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துப் பேசுவதற்காக பா.ஜ.க. அகில இந்தியத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று சென்னை வருகிறார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அமைச்சரவையில் நீடிக்க வேண்டும் என அவர் கருணாநிதியை வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.
ஆனால், அத்வானியின் சீடரான வெங்கையா நாயுடு அளித்த பேட்டி காரணமாகவே கூட்டணியை விட்டு விலகப் போவதாக திமுக அறிவித்துள்ளது. இதனால் அவரது வருகையும், சமாதானமும் எந்தளவுக்கு கூட்டணி தொடர உதவும் என்று தெரியவில்லை.