பாளையங்கோட்டை சிறையிலிருந்து 6 கொலைக் கைதிகள் தப்பியோட்டம்: மூவர் மட்டும் சிக்கினர்
திருநெல்வேலி:
பாதுகாப்பு மிகுந்த பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து 6 கொலைக் கைதிகள் துணிகரமாகத் தப்பியோடினர். இவர்களில் 3 பேர் மட்டும் உடனடியாக பிடிபட்டனர். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.
பாளையங்கோட்டையில் உள்ளமத்திய சிறையில் வெங்கடேசன், குமார், கோபால் உள்ளிட்ட 6 கொலை வழக்குக் கைதிகள் ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் மிக ரகசியமாக தங்களது அறையில் இருந்து சிறை வளாகம் வரை சுரங்கப் பாதை அமைத்து வந்துள்ளனர். இந் நிலையில் இன்று அதிகாலை 6 பேரும் சுரங்கப் பாதை வழியே அறையிலிருந்து வெளியேறினர்.
பின்னர் போர்வைகளை கயிறு போல கட்டி சிறையின் சுற்றுச் சுவர் மீது ஏறி தப்பினர்.
இவர்கள் தப்பியோடுவதைப் பார்த்த ஒரு வார்டர் அபாய மணியை ஒலிக்கச் செய்தார். இதைத் தொடர்ந்து போலீஸார் கைதிகளை விரட்டிச் சென்றனர்.
இவர்களில் 3 பேர் மட்டும் சிக்கினர். மற்ற 3 பேரும் தப்பி விட்டனர். அவர்களைப் பிடிக்க நெல்லை மாவட்டம் முழுவதிலும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தப்பியோடிய கைதிகள் தங்களது எதிரிகளை பழிவாங்கலாம் என்பதால் அவர்களது குடும்பத்தினர் எச்சரிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.