அதிமுகவினருடன் ஜெ. 2-ம் கட்ட நேர்காணல்: மாவட்டச் செயலாளர்களை தேர்வு செய்தார்
சென்னை:
அதிமுக நிர்வாகிகளுடனான தனது இரண்டாவது கட்ட நேர்காணல்- ஆலோசனைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று நடத்தினார்.
முதலில் 19ம் தேதி 4 தென் மாவட்ட நிர்வாகிகளை ஜெயலலிதா சந்தித்தார். இன்று நடந்த இரண்டாவது கட்ட நேர் காணலில் வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, நாமக்கல் ஆகிய 9 நகர் மாவட்டங்களின் அதிமுக நிர்வாகிகளை ஜெயலலிதா நேரில் சந்தித்து ஆலோசனைகள் நடத்தினார்.
இதில் பங்கேற்க நூற்றுக்கணக்கான வேன்கள், பஸ்கள், கார்களில் அதிமுகவினர் வண்டலூர் அருகே உள்ள கொளப்பாக்கத்தில் குவிந்தனர். சுமார் 20,000 பேர் வரை வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காலை 9 மணி முதல் நிகழ்ச்சி நடக்கும் மைதானத்துக்குள் நுழைய அழைப்பிதழ் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டனர். பத்திரிக்கையாளர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழ்களை சரி பார்த்து நிர்வாகிகள் பந்தலில் போய் உட்காரவே பகல் ஆகிவிட்டது. இதையடுத்து அவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
இதையடுத்து சுமார் 1 மணியளவில் சசிகலா சகிதமாக முதல்வர் ஜெயலலிதா அங்கு வந்தார். 9 மாவட்டங்களுக்கும் புதிய செயலாளர்களை ஜெயலலிதா தேர்வு செய்ததாகத் தெரிகிறது.
நிர்வாகிகளைச் சந்திக்க பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே டிவிக்களும் வைக்கப்பட்டுள்ளன.
மேடையின் பின் புறம் ஏசி செய்யப்பட்ட குடில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயலலிதாவும் சசிகலாவும் ஓய்வெடுக்க வசதி உள்ளது.
அதன் அருகே அமைச்சர்களுக்காக தனி ஏசி குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நிர்வாகிகள் ஒருவர் மீதான ஒருவரின் புகார்களை கையோடு எழுதிக் கொண்டு வந்து, பந்தலில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டிகளை நிரப்பி வருகின்றனர்.