பாமக, மதிமுகவும் விலக வேண்டும்: இளங்கோவன்
சென்னை:
திமுகவைப் பின்பற்றி பாட்டாளி மக்கள் கட்சியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்தும், மத்திய அமைச்சரவையிலிருந்தும் விலக வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர்இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தனது 56வது பிறந்த நாளைக் கொண்டாடிய இளங்கோவனுக்கு திமுக தலைவர் கருணாநிதி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்.மேலும் ஏராளமான கட்சிப் பிரமுகர்கள், தொண்டர்களும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் இளங்கோவன் பேசுகையில், திமுகவின் முடிவு வரவேற்புக்குரியது. கருணாநிதி எடுத்த முடிவை தேசியஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள பிற கட்சிகளும் பின்பற்ற வேண்டும்.
மதச்சார்பின்மை மீது உண்மையான அக்கறை கொண்டிருந்தால், மதிமுகவும், பாமகவும், திமுகவின் முடிவைப் பின்பற்றி விலகவேண்டும். அப்படி அவர்கள் செய்தால், அது குறித்து காங்கிரஸ் தலைமை பரிசீலித்து கூட்டணியில் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கும்.
திமுக மற்றும் கலைஞரின் மதச்சார்பின்மை கொள்கை குறித்து நற்சான்றிதழ் வழங்க பாரதீய ஜனதாக் கட்சிக்கு அருகதையோ,யோக்கியதையோ கிடையாது என்றார்.