ரகசியமாய் பதவியை நீடித்துக் கொண்டாரா சந்திரிகா?
கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா ரகசியமாக தன் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டித்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
சந்திரிகாவின் பதவிக் காலம் 2005ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் இருமுறைதான் அதிபர் பதவி வகிக்க முடியும். சந்திரிகா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இது இரண்டாவது முறையாகும்.
மீண்டும் அவர் சட்டப்படி அதிபராக முடியாது என்பதால் மூடிய அறைக்குள் பதவியை நீட்டித்து, அவருக்கு நாட்டின் தலைமை நீதிபதி சரத் டிசில்வா ரகசியமாய் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாகத் தெரிகிறது.
புலிகளுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதத்தில் பல தீர்ப்புகளை வழங்கி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருப்பவர் சரத் டிசில்வா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ரகசிய பிரமாணம் கடந்த 11ம் தேதி செய்து வைக்கப்பட்டதாகவும், இதனால் 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இலங்கையில் அதிபர் தேர்தல் வர வாய்ப்பேயில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அதிபர் மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் ஜனதாச பெரீஸிடம் நிருபர்கள் கேட்டதற்கு, தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்று ஒரு வரியில் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications