வீரப்பன் கும்பல் தமிழக காட்டுக்குள் ஊடுருவல்!
ஈரோடு:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தனக் கடத்தல் வீரப்பன் கும்பல் தமிழக வனப் பகுதிக்குள் ஊடுருவியுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூடுதல் டிஜிபி நடராஜ், தமிழக அதிரடிப்படை தலைவராக 2 ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்றார். அதன் பின்னர்வீரப்பன் கும்பலுக்கு உளவு சொல்பவர்களைத் தேடிப் பிடித்து அவர்களை அரசுக்குச் சாதகமாக மாற்றும் பணியைமுடுக்கி விட்டார். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.
அதிரடிப்படை நடமாட்டம் குறித்து உளவு சொல்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்காததால், செயலிழந்த வீரப்பன்கும்பல் தமிழக காட்டு எல்லைக்குள் வருவதைத் தவிர்த்தது. தொடர்ந்து கர்நாடக வனப் பகுதிகளிலேயே சுற்றிவந்தது. இருப்பினும் வீரப்பன் கும்பலைப் பிடிக்க முடியவில்லை.
இந் நிலையில், சமீபத்தில் புதிய தலைவராக விஜயக்குமார் பதவியேற்றதும், வீரப்பன் கும்பலைப் பிடிக்க புதியதிட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, நீண்ட காலமாக தமிழக காட்டு எல்லைக்குள் வராமல் இருந்த வீரப்பன் கும்பலைச் சேர்ந்த சந்திரேகெளடா, சேத்துக்குளி கோவிந்தன் ஆகியோர் தமிழக காட்டு எல்லைக்குள் ஊடுருவியுள்ளதாகத் தகவல்கள்வெளியாகியுள்ளன.
தலைமலை, கேர்மலம், கடம்பூர், அந்தியூர், கேரங்காடி, பத்திரப்படுகு ஆகிய இடங்களில் வீரப்பன் கும்பலின்நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு அதிரடிப்படை வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டு,தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
இதற்கிடையே, சிறு சிறு கிராமங்களில் நிரந்தரமாக அதிரடிப்படை வீரர்களை தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தற்போது இந்தக் கிராமங்களில் உள்ள அதிரடிப்படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ராணுவத்தினரை களமிறக்க கர்நாடகம் முடிவு:
இந் நிலையில் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க முன்னாள் ராணுவத்தினரைப் பயன்படுத்த கர்நாடக அரசுமுடிவு செய்திருப்பதாக முதல்வர் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் முன்னாள் ராணுவத்தினரின் ஊர்வலத்தைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்து கிருஷ்ணாபேசுகையில், வட கிழக்கு ராணுவ முகாம்களில் பணியாற்றிய முன்னாள் ராணுவத்தினரை வீரப்பனைப்பிடிப்பதற்குப் பயன்படுத்தும்படி கர்நாடக அரசு தலைமைச் செயலாளர் படேலிடம் கூறியுள்ளேன்.
காட்டுப் பகுதிகளில் இவர்களுக்கு உள்ள அனுபவம் சிறப்பு அதிரடிப் படைக்குப் பெரும் உதவியாக இருக்கும்.எம்.எம். மலைப்பகுதியில் வீரப்பன் கும்பல் அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன் தெரிவித்தது போல், இப்போது அவர்கள் எப்போது பிடிபடுவார்கள் என்ற கால நிர்ணயத்தை நான்கூற விரும்பவில்லை. ஆனால் முன்னாள் எம்.எல்.ஏ. நாகப்பாவின் கடத்தலுக்குப்பின் வீரப்பனைத் தேடும் பணிமுடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார்.