2 மாவட்ட செயலாளர்கள் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது கட்சியினருடன் நடத்திய நேர்காணல் நிகழ்ச்சியில் திருச்சி, மதுரை மாவட்டச் செயலாளர்களை நீக்கிவிட்டு, புதியவர்களை அப் பதவியில் அமர்த்தினார்.
ஜெயலலிதா சென்னை வண்டலூரை அடுத்துள்ள கொளப்பாக்கத்தில் மாவட்ட வாரியாக தனது கட்சியினருடன் நேர்காணல் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதன் இரண்டாம் கட்ட நேர்காணலில் 9 மாவட்ட செயலாளர்கள் தேர்தல் நடத்தப்பட்டது.
அப்போது திருச்சி, மதுரை மாவட்ட செயலாளர்களான செல்லூர் ராஜூ, வெல்லமண்டி நடராஜன் ஆகியோருக்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அவர்களுக்குப் பதிலாக முறையே போஸ், மரியம் பிச்சையை ஆகியோரை ஜெயலலிதா புதிய மாவட்ட செயலாளர்களாக நியமித்தார்.
கோவை மாவட்ட செயலாளராக கூட்டுறவுத் துறை அமைச்சர் வேலுச்சாமி, சேலம் மாவட்ட செயலாளராக கல்வி அமைச்சர் செம்மலை, நெல்லை மாவட்ட செயலாளராக சுதா பரமசிவன், நாமக்கல் மாவட்ட செயலாளராக ராக அன்பழகன், வட சென்னைக்கு ஆதிராஜராம், தென்சென்னைக்கு சேகர்பாபு, மத்திய சென்னைக்கு பாலகங்கா ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டணி குறித்து கவலை வேண்டாம்: ஜெ.
முன்னதாக நிர்வாகிகள் மத்தியில் பேசிய ஜெயலலிதா,
திமுக, காங்கிரஸ் கூட்டணி வரப் போகிறது, அதிமுக தனித்து நின்றால் ஜெயிக்காது என்று வெளியாகும் செய்திகளைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்.
சமீப காலமாக அதிமுகவினரை குழப்புவதற்காகவே சில செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன.
திமுகவும், காங்கிரஸும் கூட்டணி வைக்கப் போகின்றன, அதிமுக தனித்து நின்றால் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்பவைதான் அந்த செய்திகள். இதில் துளியும் உண்மை இல்லை. இந்த செய்திகளைக் பற்றிக் கவலையே படாதீர்கள்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து நம்முடன் யார் கூட்டணி வைக்கிறார்களோ அவர்கள்தான் அதிக அளவில் பலன் அடைந்திருக்கிறார்கள். எனவே யார் நம்முடன் கூட்டணி வைப்பார்கள் என்பது குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. யாருக்குத் தேவையோ அவர்களே நம்மைத் தேடி வருவார்கள்.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியையும் சேர்த்து உள்ள மொத்தம் 40 எம்.பி தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். இதுதான் இப்போதைக்கு உங்களது நோக்கமாக இருக்க வேண்டும். மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால் தமிழக நலன் குறித்து கவலைப்படுபவர்களாக அவர்கள் இருந்தே ஆக வேண்டும்.
கட்சியினர் மத்தியில் ஒற்றுமை நிலவ வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருக்கக் கூடாது. கடும் உழைப்பை மட்டுமே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications