மேலும் 250 அரசு ஊழியர்கள் வேலையிழக்கும் அபாயம்: டிஸ்மிஸ் ஊழியர் தற்கொலைக்கு முயற்சி
சென்னை:
வேலை நிறுத்ததில் ஈடுபட்ட அரசு ஊழியர்களில் மேலும் 250 பேர் டிஸ்மிஸ் செய்யப்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையே ஏற்கனவே டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்களில் இன்னொருவரும் தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 1 லட்சத்து 70 ஆயிரம் பேரை அரசு டிஸ்மிஸ் செய்தது. பின்னர் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 5,500 பேர் தவிர மற்றவர்கள் வேலையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
5,500 பேரையும் மீண்டும் வேலையில் சேர்ப்பது குறித்து விசாரிக்க நீதிபதி மலைசுப்பிரமணியம், நீதிபதி தங்கவேலு மற்றும் நீதிபதி சம்பத் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தலைமைச் செயலகம் மற்றும் சென்னையில் உள்ள பிற அரசு ஊழியர்கள் தொடர்பான தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.
இதனையடுத்து, 587 ஊழியர்களை அரசு டிஸ்மிஸ் செய்தது. மேலும் 1,250 பேர் பணியிறக்கம் மற்றும் சம்பள நிறுத்தம் ஆகிய நடவடிக்கைகளுடன் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே, பிற மாவட்டங்களைச் சேர்ந்த டிஸ்மிஸ் செய்யப்பட்ட 2,777 ஊழியர்கள் மீதான விசாரணை அறிக்கையை நீதிபதிகள் சம்பத், மலை சுப்ரமணியம் ஆகியோர் அரசிடம் கொடுத்துள்ளனர்.
இதில் 250 பேர் டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்றும், மற்றையோர் மீது பணியிறக்கம், ஊதிய உயர்வு ரத்து ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூன்றாவது கட்டமாக 1,000 ஊழியர்கள் குறித்த அறிக்கையை நீதிபதி தங்கவேலு திங்கள்கிழமை அரசிடம் வழங்கவுள்ளார்.
கடந்த மாத பணிநீக்கத்தின் போது, தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிஸ்மிஸ் ஊழியர் தற்கொலைக்கு முயற்சி:
இதற்கிடையே டிஸ்மிஸ் செய்யப்பட்ட தலைமைச் செயலக ஊழியரான ராமமூர்த்தி என்பவர் பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
சென்னை இந்திராநகரில் வசிக்கும் ராமமூர்த்தி, தலைமைச் செயலக விவசாயத் துறையில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 6 மாதமாக சம்பளம் இல்லாமலும், வேலை பறி போய் விட்டதாலும் மன உளைச்சலுக்கு ஆளான ராமமூர்த்தி தற்கொலை முடிவை நாடியுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களைச் சேர்ந்த டிஸ்மிஸ் செய்யப்பட்ட 2777 ஊழியர்கள் மீதான விசாரணை அறிக்கையை நீதிபதிகள் சம்பத், மலை சுப்ரமணியம் ஆகியோர் அரசிடம் கொடுத்து விட்டனர். மற்றவர்கள் குறித்த விசாரணை அறிக்கையை நீதிபதி தங்கவேலு திங்கள்கிழமை அரசிடம் வழங்கவுள்ளார்.