சென்னை ரயிலில் வாத்துக் குஞ்சுகள் ஏற்படுத்திய பரபரப்பு!
சென்னை:
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்திற்கு வந்த ரயிலில் இருந்த மர்ம பெட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.கடைசியில் அந்தப் பெட்டியில் வாத்துக் குஞ்சுகள் இருந்தது தெரியவந்தது.
திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு வரும் சென்னை மெயில் ரயில் சனிக்கிழமை சென்டிரல் ரயில் நிலையத்திற்குவந்தது. ரயிலிலிருந்து பயணிகள் இறங்கிச் சென்றதும், ரயில் நிலைய ஊழியர்கள் பெட்டி பெட்டியாக ஏறிசோதனை செய்தனர்.
அப்போது ஒரு பெட்டியின் இருக்கைக்கு கீழே ஒரு பெட்டி இருந்ததைப் பார்த்தனர். அட்டைப் பெட்டியாகஇருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் வந்தது. ஒருவேளை வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்று பயந்தஅவர்கள் உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ரயில் நிலையம் உஷார்படுத்தப்பட்டது. வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் நிபுணர்களுக்குதகவல் தரப்பட்டு அவர்கள் விரைந்து வந்தனர். பின்னர் மிகவும் ஜாக்கிரதையாக அந்த பெட்டியை எடுத்துகவனத்துடன் திறந்து பார்த்தபோது அத்தனை பேர் முகத்திலும் அசடு வழிந்தது.
காரணம் குண்டுக்குப் பதில் வாத்துக் குஞ்சுகள் இருந்ததுதான். இந்த வாத்துக் குஞ்சுகளை யாரோ சிலர் கடத்திவந்துள்ளனர். ஆனால் போலீஸார் கண்டுபிடித்து விடுவார்களோ என்று பயந்து அப்படியே விட்டு விட்டுச்சென்றுள்ளனர்.
வாத்துக் குஞ்சுகளை கிண்டியில் உள்ள தேசிய பூங்காவிற்கு போலீஸார் அனுப்பி வைத்தனர்.