காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறாது: பா.ஜ.க
சென்னை:
மக்களவைத் தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரதமருக்கான வேட்பாளரை அறிவிக்கப்போவதில்லை என்று அக் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியிருப்பது, அவரது தலைமையை கூட்டணிக்கட்சிகள் ஒத்துக் கொள்ளாது என்பதையே காட்டுவதாக பா.ஜ.க. தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.
திருவனந்தபுரம் செல்லும் வழியில், சென்னை வந்த வெங்கையா நாயுடு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் இல்லை. தலைவர் இல்லாத கட்சியான காங்கிரஸை வழி நடத்திச் செல்லும்சோனியா காந்தி, கூட்டணிக் கட்சிகளுக்கு பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார் என்று விரக்தியுடன்கூறியுள்ளார். பிரதமரை மக்கள்தான் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று மும்பையில் பேசியிருக்கிறார்.
தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே அவருக்கு தோல்வி குறித்த பயம் வந்துவிட்டதை இது காட்டுகிறது. வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை இழந்ததால்தான் கூட்டணிக்குத் தலைவர் யார் என்பதை அறிவிக்க காங்கிரஸ்தயங்குகிறது.
இப்படிப்பட்டி கட்சிக்கு மக்கள் எப்படி ஓட்டுப் போடுவார்கள்?. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர்வாஜ்பாயை முன்னிறுத்தியும், வாஜ்பாய் அரசின் சாதனைகளை விளக்கிக் கூறியும் ஓட்டு கேட்போம்.
காங்கிரஸ் கட்சியின் 45 ஆண்டு கால ஆட்சியின்போது ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், வறுமைஆகியவைதான் செழிப்போடு இருந்தன.
தமிழகத்தில் கூட்டணி குறித்து இதரக் கட்சிகளுடன் பேசுவதற்கு இன்னும் காலம் உள்ளது என்றார்.