விலகலா? இல்லையா? மதிமுக இன்று முக்கிய முடிவு
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் விலகுவது தொடர்பாக மதிமுக இன்று முக்கிய முடிவை அறிவிக்கவுள்ளது.
பொடா சட்டம் உள்ளிட்ட பல விஷயங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் பா.ஜ.க. அமைதி காத்து வந்ததாலும், திமுகவின் கோரிக்கைகளை ஏற்காமல் அலட்சியம் செய்து வந்ததாலும், மாநில பா.ஜ.க தலைவர்கள் மோதல் போக்கைக் கடைப்பிடித்ததாலும் கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் விலகுவதாக திமுக அறிவித்தது.
ஆனால் மற்றொரு முக்கிய கட்சியான பாமக கூட்டணியிலிருந்து விலக மாட்டோம் என்று கூறி விட்டது. திமுகவின் பிம்பமாக கருதப்படும் மதிமுகவின் நிலைதான் படு குழப்பமாக உள்ளது.
கட்சியின் முன்னணித் தலைவர்கள் கூட்டணியிலிருந்து விலக வேண்டாம் என்று வைகோவிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது. ஆனால் நமக்காகத்தான் திமுக கூட்டணியிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் விலகியுள்ளது. எனவே நாம் கட்டாயம் விலகியே தீர வேண்டும் என்று வைகோ கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் இன்று மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிற நிர்வாகிகளின் கூட்டம் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி குழப்பம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. அப்போது வைகோவின் கருத்து குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசிக்க உள்ளனர். அதன் பின்னர் இறுதி முடிவை கட்சியின் அவைத் தலைவர் எல்.கணேசன் வெளியிடுவார்.
குழப்பமான சூழ்நிலை நிலவினாலும் கூட வைகோவின் எண்ணப்படியே கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவையே இன்றைய மதிமுக கூட்டம் எடுக்கவுள்ளதாக உறுதியாகக் கூறப்படுகிறது.