வைகோவின் கடிதம் படித்து கண் கலங்கிய வாஜ்பாய்
டெல்லி:
தனக்கு வைகோ எழுதிய உணர்ச்சிப்பூர்வமான கடிதத்தைப் படித்த பிரதமர் வாஜ்பாய் கண் கலங்கியதாக தகவல்கள் வந்துள்ளன.
இன்று தங்களது ராஜினாமா கடிதங்களைச் சமர்பித்த மதிமுக அமைச்சர்களான கண்ணப்பனும், செஞ்சி ராமச்சந்திரனும் வாஜ்பாயிடம் இன்னொரு கடிதத்தைத் தந்தனர். அது வாஜ்பாய்க்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதம்.
சீல் இடப்பட்டு இருந்த அந்தக் கடிதத்தை தானே பிரித்தார் வாஜ்பாய். அந்த 6 பக்க கடிதத்தைப் படித்த வாஜ்பாயின் கண்களில் நீர் முட்ட செஞ்சியும் கண்ணப்பனும் அதிர்ந்துள்ளனர். மேற்கொண்டு, தொடர்ந்து பேச முடியாத வாஜ்பாய் இருவருக்கும் விடை கொடுத்து அனுப்பியுள்ளார்.
வைகோவும் கண்ணீர்:
இந் நிலையில் இன்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் வைகோ ஆஜர்படுத்தப்பட்டார். இதன் பின்னர் நிருபர்களிடம் அவர் பேசிக் கொண்டிருந்தபோது, அவரது உதவியாளர் வந்து வைகோவின காதில் ஏதோ சொல்ல, உடனே உணர்ச்சிவயப்பட்ட வைகோவின் கண்களில் இருந்து நீர் திரண்டது.
திடீரென வைகோ கண்ணீர் விட்டதால் ஆச்சரியமடைந்த நிருபர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டபோது,
நான் எழுதிய கடிதத்தை பிரதமர் வாஜ்பாய் படித்துவிட்டு கண் கலங்கியதாக செஞ்சி ராமச்சந்திரன் தகவல் அனுப்பியுள்ளார். இந்தச் செய்தியைத் தான் உதவியாளர் என்னிடம் இப்போது சொன்னார் என்றார்.