கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ராஜினாமா: பிரதமரிடம் கடிதம் தந்தனர்
டெல்லி:
மதிமுகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் மு.கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் இன்று தங்களதுபதவிகளை ராஜினாமா செய்தனர்.
நேற்றிரவு டெல்லி வந்த இருவரும் இன்று காலை பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களைநேரில் வழங்கினர். தனிப்பட்ட முறையில் வாஜ்பாய்க்கு வைகோ எழுதியிருந்த கடிதத்தையும் அவரிடம் தந்தனர்.
இதன் பின்னர் நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் திராவிட இயக்கத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகளைத் துவக்கவுள்ளோம். அதற்காக திமுகதலைவர் கருணாநிதி தலைமையில் கூட்டணி அமைப்போம். அவர் பெரும் அணியை உருவாக்கவுள்ளார். அவர்எடுக்கும் எல்லா முடிவுகளுக்கும் மதிமுக கட்டுப்படும்.
கூட்டணியில் காங்கிரசும் இருக்குமா, இல்லையா என்பதை கருணாநிதி தான் முடிவு செய்வார். காங்கிரஸ்- திமுககூட்டணியை கருணாநிதி அமைத்தால் அதில் மதிமுகவும் இடம் பெறுவதில் சிக்கல் ஏதும் இருக்காது. புலிகள்விவகாரமும் இதில் முட்டுக் கட்டையாக இருக்காது.
இலங்கைத் தமிழர்களின் அவலங்களைத் தான் மதிமுக எடுத்துக் காட்டியதே தவிர, வன்முறையை வைகோ என்றும்ஆதரித்தது இல்லை என்பது காங்கிரசுக்கு நன்றாகவே தெரியும்.
ஜாமீனில் வெளியே வருமாறு வைகோவுக்கு கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வைகோவுடன்நாங்கள் பேசுவோம். எங்கள் ராஜினாமாவை மறு பரிசீலனை செய்யும்படி பிரதமரும் கோரவில்லை. அதற்குநாங்களும் தயாராக இல்லை.
வைகோ சிறையில் இருந்தபோது நாங்கள் அமைச்சர்களாக இருந்தது எங்களுக்குள் குற்ற உணர்வைத் தந்தது.இப்போது அந்த குற்ற உணர்ச்சி விலகி மகிழ்ச்சியாக இருக்கிறோம் என அவர்கள் கூறினர்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்ற முடிவை நேற்று அக் கட்சி எடுத்தது.