For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜாமீனில் வெளியே வர வைகோ முடிவு: கருணாநிதியின் கோரிக்கை ஏற்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதியின் வேண்டுகோளை ஏற்று ஜாமீனில் வெளியே வர வைகோ முடிவு செய்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்தே ஜாமீன் கோர மாட்டேன் என வைகோ கூறி வருகிறார். ஆனால், வைகோ ஜாமீனில் வெளியே வர வேண்டும் என்பது என் அன்புக் கட்டளை என கருணாநிதி நேற்று கூறியிருந்தார். வெளியே வந்து நிறைய அரசியல் பணிகளை ஆற்ற வேண்டிய கடமை வைகோவுக்கு உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

இந் நிலையில் இன்று பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் வைகோவை நிருபர்கள் சந்தித்தனர். அப்போது கருணாநிதியின் கோரிக்கை குறித்து கேட்டபோது,

கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி வேலூர் சிறையில் என்னை சந்தித்த நிருபர்கள், ஜாமீனில் வெளியே வருவீர்களா என்று கேட்டார்கள். வர மாட்டேன் என்று கூறினேன். அதில் உறுதியாக இருப்பேன் என்றேன். உறுதியாகவே இருந்தேன்.

பின்னர் என்னை கருணாநிதி சந்தித்தும் ஜாமீனில் வெளியே வா என்று வற்புறுத்தினார். அப்போதும் என நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி, ஜாமீன் கோர மறுத்துவிட்டேன்.

இப்போது மீண்டும் நானும் என சகாக்களும் ஜாமீனில் வர வேண்டும் என்று அவர் கூறியிருப்பது அவரது பாசத்தைத் தான் காட்டுகிறது. இந்த வேண்டுகோளை அன்புக் கட்டளையாக ஏற்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இன்றைய அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைக் கருத்தில் கொண்டே கருணாநிதி மீண்டும் இவ்வாறு கூறியிருப்பதாக நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை கருணாநிதியின் அன்புக் கட்டளையை மதிக்கத் தயார். கட்சியின் நிர்வாகிகளுடன் பேசி விரைவில் இது குறித்து முடிவெடுப்பேன் என்றார்.

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசியது பொடா சட்டத்தின் கீழ் குற்றமல்ல என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதன் அடிப்படையில் ஜாமீன் மனு தாக்கல் செய்த தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனுக்கு பொடாவில் ஜாமீன் கொடுக்கப்பட்டுவிட்டது.

மேலும் பொடாவில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்தவர்கள் ஜாமீன் கோரினால், அதை சாதாரண வழக்காகவே கருதி ஜாமீன் வழங்கலாம் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இதனால் வைகோவும் ஜாமீன் கோரினால் நிச்சயம் விடுதலையாகலாம் என்ற சூழ்நிலை நிலவுகிறது.

இதற்கிடையே பொடா மறு ஆய்வுக் குழு வரும் 7ம் தேதி டெல்லியில் கூடுகிறது. 9ம் தேதி இக் கூட்டம் முடிவடையும். இதில் வைகோவை மறு ஆய்வுக் குழு விடுதலை செய்துவிட்டால் உடனே அவர் வெளியே வந்துவிட முடியும்.

அவ்வாறு இல்லாமல் பொடா ஆய்வுக்குழு முடிவேதும் எடுக்காமல் போனால், ஜாமீன் கோரி வைகோ சார்பில் மனு தாக்கலாகலாம் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X