அதிமுகவுடன் கூட்டணி வரலாம்: பா.ஜ.க
சென்னை:
தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பா.ஜ.கவின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அக் கட்சியின் தலைவர் வெங்கைய்யா நாயுடு கூறினார்.
அதிமுக- பா.ஜ.க. கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய நாயுடு, அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என தமிழக பா.ஜ.கவினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து வரும் 11, 12ம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடக்கும் பா.ஜ.க. தேசிய செயற்க் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
பா.ஜ.கவுக்கு எதிராக காங்கிரஸ் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் கவலை இல்லை. மாநிலங்களில் கோஷ்டிச் சண்டையால் காங்கிரஸ் வலுவிழந்து கிடக்கிறது. அடுத்த பிரதமர் யார் என்பதை சொல்ல முடியாத நிலையில் அக் கட்சி உள்ளது என்றார்.
மேலும் நாடாளுமன்றத்துக்கு முன் கூட்டியே தேர்தல் நடத்த வேண்டும் என பா.ஜ.க தலைவர்கள் விரும்புகின்றனர் என்றும் நாயுடு கூறினார்.
24ம் தேதி நாடாளுமன்றம் கலைப்பு:
இதற்கிடையே தேர்தலை மே மாதத்தில் சந்திக்கும் வகையில் வரும் 24ம் தேதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
21ம் தேதி கூடும் நாடாளுமன்றக் கூட்டத்தை மூன்று நாட்கள் மட்டும் கூட்டிவிட்டு, 24ம் தேதியை அவையைக் கலைத்துவிடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாருடன் கூட்டணி? மாயாவதி பதில்
இதற்கிடையே இன்று சென்னை வந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது தொடர்பாக வரும் 6ம் தேதி டெல்லியில் முடிவெடுக்கப்படும் என்றார். காங்கிரசுடன் கைகோர்க்க மாயாவதி முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.