எது சந்தர்ப்பவாத கூட்டணி?: வாசன் ஆவேசம்
சென்னை:
தமிழக மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியாக திமுக- காங்கிரஸ் கூட்டணி உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் வாசன் கூறியுள்ளார்.
சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் இது தொடர்பாக அவர் கூறியதாவது:
திமுக- காங்கிரஸ் கூட்டணி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே முடிவாகிவிட்டது என்றும், இது சந்தர்ப்பவாதக் கூட்டணி என்றும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாார்.
தமிழக மக்கள் விரும்பும் வெற்றிக் கூட்டணியாக எங்கள் கூட்டணி உள்ளது. சந்தர்ப்பவாதக் கூட்டணி எது என்பது தேர்தலுக்குப் பிறகு தெரியும். அதிமுக- பா.ஜ.க. கூட்டணி தோல்வியடையப் போவது உறுதி.
இஸ்லாமிய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில், ஹஜ் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மத்திய அரசு பறித்துள்ளது. அவற்றைத் திரும்ப அளிக்கவேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர்களிடம் மக்களவைத் தேர்தல் குறித்து விவாதித்து வருகிறேன். அவர்களுடன் விவாதிக்கப்பட்ட கருத்துக்களை டெல்லி சென்று கட்சி மேலிடத்திடம் தெரிவிப்பேன். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வளவு சீட் வேண்டும் என்பதை மேலிடத்திடம் வலியுறுத்துவேன் என்றார்.
முன்னதாக சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி, தங்கபாலு, குமரி அனந்தன், சோ.பாலகிருஷ்ணன் ஆகியோரை வாசன் சந்தித்துப் பேசினார்.