அதிமுக செயலாளர் வெட்டி கொலை: இன்னொரு அதிமுக பிரமுகரின் மனைவி கொலை
கடலூர் & தர்மபுரி:
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஜெ. பேரவை இணை செயலாளர் பக்கிரிசாமி, வீடு புகுந்து வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதைத் தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
அதேபோல தர்மபுரி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சிக்குச் சென்ற தளி அதிமுக பிரமுகர்ஒருவரின் மனைவி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
குறிஞ்சிப்பாடி அண்ணாநகரைச் சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் பக்கரிசாமி (30). இவரும் அதேபகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை, வீரமணி, வெங்கடேசன் உள்ளிட்ட சிலரும் தமிழ்நாடு விடுதலைப் படையில்உறுப்பினர்களாக இருந்தனர். அந்த இயக்கத்தை தமிழக அரசு தடை செய்ததையடுத்து, இவர்கள் அதிமுக மற்றும்திமுகவில் இணைந்தனர்.
பக்கிரிசாமி குறிஞ்சிப்பாடி ஒன்றிய ஜெ.பேரவை இணை செயலாளரானார். அண்ணாதுரை திமுகவில் இணைந்தார்.அந்தப் பகுதியில் கட்டப் பஞ்சாயத்து நடத்துவதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் பக்கிரிசாமி அண்ணாதுரை மீது போலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதையறிந்த அண்ணாத்துரை,வீரமணி, வெங்கடேசன் உள்ளிட்ட 9 பேருடன் பக்கிரிசாமியின் வீட்டிற்கு சென்று, அவரை வெட்டியுள்ளார். அதைதடுக்க முயன்ற அவரது மனைவி பானு(20), அவரது தம்பி சுரேஷ்(20) ஆகியோருக்கும் வெட்டு விழுந்துள்ளது.
இதில் பக்கிரிசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவியும், தம்பியும் கடலூர் அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 9 பேரையும் தேடிவருகின்றனர்.
அதிமுக பிரமுகரின் மனைவி கொலை:
தளி அருகே உள்ள குருபரப்பள்ளியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் பைரப்பா. இவரது மனைவி மாதேவம்மா(30).தர்மபுரி மாவட்ட நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சிக்காக பைரப்பா சென்னை சென்றுள்ளார்.
திரும்பி வந்துபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. ஒருவேளை மாதேவம்மா தனது அம்மா வீட்டிற்குச்சென்றிருக்கலாம் என்று நினைத்தார். அப்போது வயல்காட்டுப் பக்கம் மாதேவம்மா கழுத்து அறுபட்டு இறந்துகிடப்பதாக செய்தி வந்தது. இதனையடுத்து போலீஸூக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸார் மாதேவம்மாவின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.