டிஸ்மிஸ் ஆன 999 அரசு ஊழியர்களுக்கும் மீண்டும் வேலை?
சென்னை:
வேலைநிறுத்தம் செய்து டிஸ்மிஸ் ஆன 999 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மீண்டும் வேலை தரவும், மற்ற ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை வாபஸ் பெறவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பான அறிவிப்பு பொங்கல் தினத்திற்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். இதையடுத்து 1 லட்சம் அரசு ஊழியர்களை அரசு டிஸ்மிஸ் செய்தது. இந்தியாவையே உலுக்கிய இந்த டிஸ்மிஸ் நடவடிக்கையைடுத்து தங்களது வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அரசு ஊழியர்கள் தெரிவித்தனர். இருப்பினும் டிஸ்மிஸ் நடவடிக்கையை அரசு வாபஸ் பெறவில்லை.
இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அங்கும் அரசு ஊழியர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தை அரசு ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் அணுகினர். அதில் 6072 பேர் தவிர மற்றவர்களை உடனடியாக வேலைக்கு சேர்க்குமாறும், 6072 பேருடைய வழக்குகளையும் 3 நீதிபதிகள் கொண்ட குழுவை வைத்து விசாரிக்குமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி சம்பத், நீதிபதி மலைசுப்ரமணியம், நீதிபதி தங்கவேல் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் இறுதியில் 999 பேர்தவிர மற்றவர்களுக்கு பதவி இறக்கம், ஊதிய உயர்வு ரத்து போன்ற ஓரிரு தண்டனைகளுடன் பணி வழங்கப்பட்டது. 999 பேர் நிரந்தரமாக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இருப்பினும் முதல்வர் பெரிய மனது வைத்து அனைத்துத் தண்டனைகளையும் ரத்து செய்து, 999 பேரையும் மீண்டும் வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் சூரியமூர்த்தி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார். முதல்வர் ஜெயலலிதாவைத் தாங்கள் இன்னும் நம்பியிருப்பதாக அவர் நம்பிக்கையுடன் கூறி வந்தார்.
இந் நிலையில் 999 பேரையும் மீண்டும் பணியில் சேர்க்கவும், மற்றவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை ரத்து செய்யவும் ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சட்டத்துறை மற்றும் சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், 999 பேரையும் மீண்டும் சேர்த்துக் கொள்வதில் பிரச்சினை இல்லை என்று அவர்கள் கூறி விட்டதாகவும் தெரிகிறது.
வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்பாக இதுதொடர்பான அறிவிப்பை ஜெயலலிதா வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தகவல் அரசு அலுவலர்கள் மத்தியில் பரவியது. இதையடுத்து டிஸ்மிஸ் ஆன ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், எதிர்க்கட்சிகள் கூட்டணி வலுவாகி வரும் நேரத்தில் வேலையிழந்த அரசு ஊழியர்களை மீண்டும் வேலையில் சேர்க்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்தி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications