ஸ்பிக் ஊழல் வழக்கு: தீர்ப்பு வழங்க தனி நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
டெல்லி:
முதல்வர் ஜெயலலிதா மீதான ஸ்பிக் பங்கு பத்திர ஊழல் வழக்கில், தனி நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்க உச்சநீதிமன்றம் இன்று அனுமதி கொடுத்துள்ளது.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது அரசிடம் இருந்த ஸ்பிக் நிறுவன பங்குகள், அந்த நிறுவனத்துக்கேமிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டன. இதனால் அரசுக்கு ரூ. 28.29 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா, ஸ்பிக் அதிபர் ஏ.சி. முத்தையா செட்டியார், அப்போதைய டிட்கோ மற்றும்தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு தனி நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி ஜெயலலிதா சார்பில்உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், வழக்கை தனி நீதிமன்றம்தொடர்ந்து விசாரிக்க அனுமதி வழங்கியது. ஆனால், தீர்ப்பளிக்க தடை விதித்தது.
இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடந்தது. கடந்த மாதம் ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிநீதிபதியின் கேள்விகளுக்கு பதில் தந்தார்.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்த வழக்கில் சிபிஐ தனது குற்றச்சாட்டை பதிவு செய்தது. அதில், ஸ்பிக் பங்குகளைஅடி மாட்டு விலைக்கு விற்க முடிவெடுத்தது ஜெயலலிதா தான். தனது பதவியை தவறாகப் பயன்படுத்தி அவர் சதிசெய்தார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.
நீதிபதி ராஜமாணிக்கம் விசாரித்து வந்த இந்த வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. ஆனால், தீர்ப்பு வழங்க உச்சநீதிமன்றத் தடை இருந்து வந்ததால் நீதிபதியால் தீர்ப்பு வழங்க முடியாத சூழல் இருந்தது.
இந் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்தில் முன்னாள் தொழில்துறை செயலாளர்ராமச்சந்திரன் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் ஸ்பிக் வழக்கில் தீர்ப்பை வழங்கக் கூடாது என்று தனிநீதிமன்றத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அவர் கோரியிருந்தார்.
இந் நிலையில் நீதிபதி ராஜமாணிக்கமும் வரும் 31ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளதால், ஸ்பிக் பங்கு ஊழல்வழக்கில் தீர்ப்பு கூற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தான் ஓய்வு பெறவுள்ளதால், தடையை நீக்குமாறு கோரிநீதிபதி ராஜமாணிக்கமும் உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந் நிலையில் ராமச்சந்திரனின் மனுவை விசாரித்த நீதிபதி அகர்வால், நீதிபதி லட்சுமணன் அடங்கிய பெஞ்ச், தனிநீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட இன்று அனுமதி வழங்கியது.
இதனால் இந்த வழக்கில் ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வெளியாகிவிடும்.