விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் மது அருந்திய ஊழியர்கள் மீது நடவடிக்கை
விழுப்புரம்:
காணும் பொங்கல் தினத்தன்று விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்திலேயே மது அருந்தி விட்டு கைகலப்பில் ஈடுபட்ட 5ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான காணும் பொங்கல் தினத்தன்று, விழுப்புரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் நகராட்சிஊழியர்கள் மது வாங்கி ஹாயாக அமர்ந்து சாப்பிட்டுள்ளனர். பின்னர் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையும்போட்டுள்ளனர்.
விழுப்புரம் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தாசில்தார் விசாரணை நடத்தினார். பின்னர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அறிக்கையும் கொடுத்தார்.
அதன் அடிப்படையில், 5 நகராட்சி ஊழியர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
விழுப்புரம் நகராட்சித் தலைவராக திமுகவைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் இருக்கிறார். இந்த நகராட்சியை இயங்கவிடாமல் அதிமுகவினர் தொடர்ந்து இடையூறு செய்து வருவதால் நகராட்சி நிர்வாகம் பல மாதங்களாக முடங்கிக் கிடக்கிறது.
இதனால் நகராட்சி அலுவலகத்தில் ஒரு வேலையும் நடைபெறுவதில்லை. இதன் காரணமாகவே நகராட்சி அலுவலகத்தில் இதுபோன்ற பல்வேறு சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் நடைபெறுவதாக விழுப்புரம் மக்கள் குமுறல் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications