குடியரசு தின விழா: கோலாகல கொண்டாட்டம்
டெல்லி:
நாட்டின் 55வது குடியரசு தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படைகளின் அணிவகுப்புமரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பிரதமர் வாஜ்பாய் காலை இந்தியா கேட்டில் உள்ள அமர் ஜவான் ஜோதிக்குச் சென்று, வீர மரணம் அடைந்தராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினார். இரண்டு நிமிட மெளனம் அனுசரிக்கப்பட்டது.
பின்னர் அவர் அணிவகுப்பு நடைபெறும் ராஜ்பாத்திற்கு சென்றார். அங்கு நமது தேசிய சின்னமான சாரநாத்ஸ்தூபி உள்ள இடத்திற்கு நேர் எதிரே அவர் அமர்ந்தார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், 46 குதிரை வீரர்கள்முன்னே அணிவகுத்துச் செல்ல அரசு மரியாதையுடன் அழைத்து வரப்பட்டார்.
இந்த விழாவுக்காக சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பிரேசில் நாட்டு அதிபர் லூயிஸ் இனாகியோ லூலாடா சில்வா அவருடன் வந்தார்.
பின்னர் 21 குண்டுகள் முழங்க, கலாம் தேசியக் கொடியை ஏற்றினார். இதனையடுத்து 4 ஹெலிகாப்டர்கள்குடியரசுத் தலைவர் மாளிகை பக்கமிருந்து மலர்களைத் தூவியபடி, இந்தியா கேட் நோக்கி பறந்தன.
இதைத் தொடர்ந்து மேஜர் ஜெனரல் தாமஸ் மேத்யூ தலைமையில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. அப்போதுபரம்வீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா விருது பெற்ற வீரர்கள் கலாமுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.
அணிவகுப்பில் ராணுவத்தில் புதிதாய் சேர்க்கப்பட்டுள்ள அக்னி-2 ரக ஏவுகணைகள், டி-90 ரக பீஷ்மா டாங்குகள்,எல்.ஏ.எச். இலகு ரக ஹெலிகாப்டர்கள், விமானியில்லாமல் பறக்கும் டுரோன் ரக விமானங்கள் ஆகியவை இடம்பெற்றன.
பின்னர் இந்தியாவின் பரந்துபட்ட கலாச்சாரப் பெருமைகளை பறைசாற்றும் வகையில், பல்வேறு மாநிலங்களைச்சேர்ந்த கலாச்சாரக் குழுக்கள் அணிவகுத்து சென்றனர்.
அதே போல தமிழகம் உள்பட நாடு முழுவதும் குடியரசு தினம் மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.சென்னையில் ஆளுநர் ராம்மனோகர் ராவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முப்படைகள் மற்றும்காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா,அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர்கள் தேசியக் கொடியேற்றினர்.