தோசையில் விஷம்: சோளிங்கரில் ஒரே குடும்பத்தில 4 பேர் தற்கொலை
சோளிங்கர்:
கடன் தொல்லை காரணமாக தோசையில் விஷம் கலந்து சாப்பிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
சோளிங்கர் கணபதி தெருவில் வசித்து வந்தவர் சீனிவாசன் (33). இவர் ஒரு கட்டட மேஸ்திரி. இவருக்கு தேன்மொழி (29) என்ற மனைவியும், சத்யா (11) என்ற மகனும், பிரியா (6) என்ற மகளும் இருந்தனர்.
கடந்த காலத்தில் சீனிவாசனுக்கு உடல் நிலை சரியில்லாதபோது, மருத்துவ செலவுகளுக்கும், குடும்ப செலவுகளுக்கும் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டபோது இவரிடம் பணம் இல்லை. திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு வருவாயும் இல்லை.
இதனால் மனம் நொந்த சீனிவாசன் மற்றும் அவரது குடும்பத்தினர் தோசை மாவில் விஷம் கலந்து, அதில் தோசை சுட்டு சாப்பிட்டனர். இதில் நான்கு பேரும் பரிதாபமாக உயிரை இழந்தனர். தற்செயலாக சீனிவாசனின் வீட்டிற்கு வந்த தேன்மொழியின் அக்கா மகன் ஜெகதீசன், நால்வரும் பிணமாக இருப்பதைப் பார்த்தார்.
பின்னர் சோளிங்கர் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து, பிணங்களை சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் சோளிங்கர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications