வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு மரண தண்டனை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
டெல்லி:
வீரப்பனின் கூட்டாளிகள் நான்கு பேருக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள் தண்டனையை கடுமையாக்கி அதை தூக்கு தண்டனையாகஉச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது.
கடந்த 1992ம் ஆண்டு சேலம் மாவட்டத்தை ஒட்டிய சுரக்காமேடு என்ற கர்நாடக வனப் பகுதியில் வீரப்பன் வேட்டைக்காகசென்ற அம் மாநில போலீஸார் மற்றும் வனத்துறையினர், வீரப்பன் கும்பல் வைத்த கன்னிவெடியில் சிக்கினர். இதில் 22 பேர்பலியாயினர். இவர்களில் 5 பேர் போலீஸார், 2 பேர் வனத்துறையினர், 2 பேர் போலீஸாருக்கு உளவு சொல்பவர்கள் மற்றவர்கள்அப்பாவிகள்.
மேலும் காவல்துறைக் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 14 பேர் படுகாயமடைந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக வீரப்பனின் கூட்டாளிகளான சைமன், ஞானபிரகாஷ், பாம் சேகரா மற்றும் பல்வீந்தர் சிங் என்றபலவேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது மைசூர் தடா நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அதில் இந்தநால்வருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தடா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து நான்கு பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். தங்களது ஆயுள் தண்டனையை ரத்துசெய்து, தங்களை விடுவிக்க வேண்டும் என நான்கு பேரும் கோரியிருந்தனர்.
இதை எதிர்த்து கர்நாடக அரசும் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், இந்த நால்வருக்கும் ஆயுள் தண்டனை போதாது, அதைமரண தண்டனையாக உயர்த்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என கர்நாடக அரசு கோரியிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி சபர்வால், நீதிபதி அகர்வால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், நால்வரின் ஆயுள்தண்டனையையும் மரண தண்டனையாக உயர்த்தி இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.